திருப்புகழ்க் கதைகள் 211
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
சிவனார் மனம் குளிர – பழநி
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றி ஐம்பத்தி ஆறாவது திருப்புகழ், ‘சிவனார் மனம் குளிர’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா! உனது அருளின் திறத்தை எண்ணாது, அவமாயை கொண்டு உழலும் அடியேனை, அஞ்சேல் என்று அருளி, அருள் ஞான இன்பம் தந்து ஆண்டு கொள்வாய்”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இது மிகவும் எளிமையான திருப்புகழ். குழந்தைகளுக்கு திருப்புகழ் பாடச் சொல்லித் தரும்பொழுது இந்தத் திருப்புகழை முதன்மையாகச் சொல்லித் தருவார்கள். இதன் சந்தமும் வார்த்தைகளும் மிக எளிதானவை. இனி திருப்புகழைக் காணலாம்.
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் …… குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் …… நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென …… வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது …… புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் …… மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு …… விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் …… வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் …… பெருமாளே.
இந்தத் திருப்புகழின் பொருளாவது – பிரணவ மந்திரப் பொருள் விளக்க உபதேசத் திரு அமுதால் சிவபெருமானுடைய திருவுள்ளமானது குளிரும்படி, உபதேசமுறையாகக் கூறத்தக்க குடிலை மந்திரத்தின் பொருளை, கரத்தில் ஞான முத்திரையாக விளக்கியதும் அல்லாமல் அவருடைய இரு செவிகளிலும் உபதேசித்தருளிய ஞானகுருநாதரே;
சிவகாமசுந்தரவல்லி அம்மையாருடைய சிறந்த திருக்குமாரரே; கந்தமூர்த்தியே; பால் தயிருடன் வெண்ணெயையும் களவாடிய, யசோதையால் உரலில் கட்டுப்பட்ட கண்ணபிரானும், பாவத்தை நீக்குபவரும், ரகுகுலத்தில் அவதரித்த ஸ்ரீராமசந்திரரும் ஆகிய விஷ்ணுதேவர் சிந்தை மகிழ் மருகரே; ஒன்பது கண்டத்தவர்களாலும் வணங்கப்பட்ட மெய்த் தெய்வமே; மணியணி மலர்களால் அலங்கரிக்கப்பட்டவரே;
நன்மையைத் தரும் கல்வியின் மூலம் விளைவதற்கு நிலைக் களனாய் விளங்கும் தலைவரே; தெய்வயானை அம்மையாருக்கும் குறவர் குடியில் தோன்றிய அழகிய மின்னலை நிகர்த்த வள்ளி அம்மையாருக்கும் மணவாளரே; சம்பிரமம் பொருந்திய வல்லபமும் வீரமுடைய கதிர் வேலாயுதக் கடவுளே;
திருஆவினன்குடி என்னும் திவ்விய தலத்தில் எழுந்தருளியுள்ள செவ்வேட் கடவுளே; கட்டழகுடையவரே; உலகில் மெய்ப் பொருளைக் கண்டுரைத்த அறிவாற்றலுடைய பெருமையிற் சிறந்தவரே; தேவரீருடைய திருவருட் செயலை விரும்பி மனத்தில் நினைந்து துதிக்காமல் பயனற்ற மாயையிற் சிக்கி, உலகில் வீணாக அலைந்து, வாணாளைக் கழித்து, சுழன்று திரிகின்ற, அடியேனை ‘அஞ்சேல்!’ என்று கூறி அருளவேண்டும்.
ஊன் உடம்பு நீங்கி, ஞான உடம்பைப் பெறவும் பிறப்பிறப்பாகிய பெருந்துன்பம் நீங்கவும் திருவருள் ஞான இன்பத்தை அடியேனுக்குக் கொடுத்து அருள்புரிவீர். – என்பதாகும்.
இத்திருப்புகழில் முருகப் பெருமான் சிவபிரானுக்கு பிரணவமந்திரத்தை உபதேசம் செய்த கதையும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் பாலலீலைகளில் ஒன்றான வெண்ணை திருடிய கதையும், ரகு குலம் பற்றிய குறிப்பும் இடம்பெறுகிறது.