
பாரத உள்துறை அமைச்சர் அமித் ஷா வின் கொள்ளு தாத்தாவும் தாத்தாவும் பரோடா மன்னராட்சிக்கு உட்பட்ட மானசா பகுதியில் நகர தலைவர்களாக (அரசரின் பிரதிநிதிகளாக) இருந்தனர். அப்போது அவர்கள் வீட்டுக்கு ஸ்ரீ அரவிந்தர் வந்து தங்கி உள்ளார். அவர் வீற்றிருந்த நாற்காலியை அமித் ஷா இன்றும் மரியாதையுடன் பாதுகாத்து வருகிறார்.
மிகவும் முற்போக்கான சிந்தனையும் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய தெளிவான கண்ணோட்டமும் கொண்டவராக இருந்தார் பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட். இவர்தான் பீம்ராவ் (டாக்டர்) அம்பேத்கரை அமெரிக்காவுக்கு படிக்க உதவி தொகை கொடுத்து அனுப்பியவர். இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவுடன் இவரிடம் அதிகாரியாக பணிபுரிந்தவர் ஸ்ரீ அரவிந்தர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது :
கெய்க்வாட் தனக்கு மிகவும் நம்பிக்கையான மூத்த அதிகாரிகளை குஜராத்தில் இருந்த பிற இளவரசர்கள், உயர் அதிகாரிகளிடம் அனுப்பி தான் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் முற்போக்கான திட்டங்களை பற்றி எடுத்துரைப்பார்.
அப்படி மானசாவின் (இன்றைய காந்திநகர் மாவட்டத்தில் உள்ள பகுதி) நகர தலைவராக இருந்த என் கொள்ளு தாத்தாவிடம் பேச ஸ்ரீ அரவிந்தரை அனுப்பினார்.
ஸ்ரீ அரவிந்தர் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்து என் கொள்ளு தாத்தாவிடம் ஆட்சி மற்றும் நிர்வாகம் பற்றிய மகாராஜாவின் 19 அம்ச திட்டத்தை பற்றி எடுத்துக் கூறினார்.
‘அரசர் எப்போதும் செல்வாக்குள்ள தனி நபர்களின் நலனை விட பொது ஜனங்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்’ என ஸ்ரீ அரவிந்தர் எங்கள் குடும்ப மூத்தவர்களிடம் சொன்னதாக என் தாத்தா அடிக்கடி என்னிடம் கூறியுள்ளார். அவர் (ஸ்ரீ அரவிந்தர்) அமர்ந்திருந்த நாற்காலி எங்கள் வீட்டில் இன்னமும் உள்ளது.
அந்த நாற்காலியை காட்டி இதில் மிக உயர்ந்த மனிதர் ஒருவர் உட்கார்ந்து உள்ளார். எனவே இது பாதுகாக்க வேண்டுமென என்னிடம் தாத்தா கூறியுள்ளார். எனவே அதை நான் இன்றும் பாதுகாத்து வருகிறேன். அந்த நாற்காலி இன்னமும் உறுதியாக, நன்றாக உள்ளது’ என்று அமித்ஷா கூறியுள்ளார்.




