மங்கையை தூக்கிச் சென்ற மாயவன் வெகுதூரத்தில் விடிவெள்ளி வேகமாக மேலே வந்து விடிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியது. பஞ்சனையில் படுத்திருந்த திருவாங்கூர் மகாராஜா வீர ரவிவர்மாவின், உடன்பிறவா சகோதரியின் மகளான மீனாளின் கண்களில் விடிவெள்ளியின் ஒளி விழுந்தது. அவள் மனது என்னமோ இரவிலிருந்தே துடித்துக் கொண்டிருந்தது. மனது மட்டுமல்ல. அவளது இடதுகண்ணும் சேர்ந்து துடித்தது. பத்மநாதபுர அரண்மனையிலிருந்து சற்றுத்தள்ளி அமைந்திருந்த ராஜகுலமகளீருக்கு என்று அமைக்கப்பட்டிருந்த குளத்துக்குச் சென்று நீராடிவிட்டு, சுவாமியையும் தரிசித்து விட்டால் மனது சற்று அமைதி கிட்டும் என்று மீனாள் நினைத்தாள். அரண்மனையில் அவளுக்கு செல்லம் அதிகம்தான். அவளின் புத்திசாலித்தனமான யோசனைகள் மகாராஜாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவளின் முக்கியத்துவம் நாளுக்குநாள் அதிகமானது. அவள் கேட்ட எதுவும் உடனே கிடைத்தது. மீனாளுக்கும், அவளது தாயாருக்கும் தனிப்பல்லக்குகள் இருந்தன. மீனாளின் தந்தை இறந்த பிறகு அவளுக்குத் தாயிடம் பாசம் அதிகமிருந்தது. தூங்கிக்கொண்டிருந்த தாயை எழுப்பி சொல்லிவிட்டு, நீராடும் குளத்துக்கு பல்லக்கில் சென்றாள். அவளுக்கு பாதுகாப்பிற்கு இரண்டு காவலர்களும் கைகளில் வாளுடன் பல்லக்கின் பின்னால் வந்தார்கள். அதிகாலையில் தாடாகம் மிகவும் ரம்மியமாக இருந்தது. சற்றுத் தொலைவில் நீண்டமலைத்தொடர் தெரிந்தது. குளத்தில் இறங்கியவள் வெகுதூரத்தில் நீலப்புரவி ஒன்று வருவதைக் கவனித்தாள். இது போன்ற புரவி இங்கு கிடையாதே? வருவது யார்? மீனாள் இன்னும் உற்றுப்பார்த்தாள். புரவியில் இருந்தவனுக்கு இருபது பிராயம் கூட இருக்காது. உயரமாக இருந்தான். நன்றாக சிவந்து இருந்தான். இவன் இங்கு உள்ளவன் போல இல்லையே? யாராக இருக்கும்? என்று எண்ணிணாள். அதற்குள் நீலப்புரவி அவள் குளித்துக் கொண்டிருந்த தடாகம் அருகே வந்தது. தடாகத்தின் அருகே வரக்கூடாதே. இவன் ஊருக்குப் புதிதானதால் தெரியாமல் வருகிறான் போலும். உள்ளே வந்தால் அவன் இறப்பது உறுதி. விவரம் அறியாமல் வருகிறான். அவனை எப்படி தடுப்பது? காவலனிடம் ஏதோ அவன் சொல்வது அவள் காதில் விழுந்தது. என்ன மொழியில் பேசுகிறான்? புரியவில்லையே? மீனாள் தடாகத்திலிருந்து வேகமாக வெளியே வந்தாள். அவள் ஆடையிலிருந்து நீர்வடிந்து கொண்டிருந்தது. அவள் வெளியே வருவதற்குள் சிவந்து உயரமாக இருந்தவனுக்கும், காவலர்களுக்கும் வாட்சண்டை ஆரம்பித்திருந்தது. பொழுது புலராத நேரத்தில் வாட்கள் மோதியதில் நெருப்புப் பறந்தது. அவனின் தாக்குதல் திருவாங்கூர் தாக்குதலில் இருந்து வேறுபட்டிருந்தது. சற்றுநேரத்தில் காவலர்கள் இருவரும் விழுந்தார்கள். பல்லக்கு தூக்கிகள் அவனை தாக்கவந்தார்கள். அவனின் வாள், அவர்களையும் வீழ்த்தியது. அவள் அருகில் வந்தவன் சொன்னது அவளுக்குப் புரியவில்லை. இது கேரளத்தமிழ் இல்லை. ஆனால் அவன் பேச்சு அவனை என்னமோ செய்தது. “யார் நீ? எதற்கு இவர்களைத் தாக்கினாய்?” என்றாள் மீனாள் தமிழில். அவள் சொன்னது அவனுக்குப் புரியவில்லை. அதற்குள் கீழேவிழுந்த காவலன் ஒரு குறுவாளை அவன் மீது வேகமாக எறிந்தான். அதை ஒரு விநாடி மீனாள், புரவியில் வந்தவனை சட்டென்று தள்ளினாள். குறுவாள் அவனைத் தொட்டுக்கொண்டு சென்றது. அவளை நன்றியுடன் பார்த்தவன், சட்டென்று அவளைத் தூக்கினான். அவளை இருக்கிப் பிடித்தபடி புரவியில் ஏறியவன், அதன் கழுத்தைத் தொட நீலப்புரவி பறந்தது. இதுவரை எந்த ஆண்மகன் அருகிலும் இத்தனை அருகில் மீனாள் இருந்தவளல்ல. அவனின் அணைப்பு அவளுக்குப் பிடித்துதானிருந்தது. இத்தனைக்கும் அவன் அவளை இருக்கிப் பிடித்திருக்கவில்லை. மீனாள் நினைத்திருந்தால் புரவியிலிருந்து இறங்கியிருக்கலாம். ஆனால் மீனாள் இறங்கவில்லை. அவனது அன்பான அனைப்பு அவளை இறங்க அனுமதிக்கவில்லை. நெய்யாற்றங்கரை வந்ததூம் நீலப்புரவியின் வேகம் குறைந்தது. மீனாளைத் தூக்கி வந்தவன் ஆற்றின் கரையில் புரவியை நிறுத்தினான். “பெண்ணே, நான் செய்தது தவறுதான். காவலர்களை வீழ்த்தி உன்னை புரவியில் கொண்டு வந்தது தவறுதான்” என்றான் வேற்று மொழியில். மீனாள் புரியாமல் விழித்தாள். ஆனால் அவன் அவளைத் திரும்பிச் செல்லும்படி கைகளைக் காட்டினாள். மீனாளுக்கு புரிந்தது. தன்னை திரும்பிப் போகச் சொல்கிறான் போலும். எப்படிச் செல்லமுடியும்? அப்படிச்சென்றால் பல கேள்விகள் பிறக்கும். காவலர்கள் தான் தூக்கிச் செல்லப்பட்டதைச் சொல்வார்கள். அதன் பிறகு தன்னை யார் ஏற்று கொள்வார்கள்? அதுமட்டுமல்ல அந்த வாலிபனின் நெருக்கம் மீனாளுக்கு பிடித்திருந்தது. தாயை நினைத்தால்தான் கவலையாக இருந்தது. “யார் நீ? என்னை ஏன் தூக்கி வந்தாய்?” என்றாள் மீனாள். அவள் பேசியது அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவள் போகப் பிரியப்படவில்லை என்று அவனுக்குப் புரிந்தது. அது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. வந்த வாலிபன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இது போன்ற அழகியை இதுவரை அவன் பார்த்ததில்லை. அவள் கண்கள் கயலைப் போலிருந்தன. அவை எத்தனையோ கதைகளைச் சொன்னது. அந்தக் கதைகளில் அவளும் அவனும் எத்தனை எத்தனை ஜென்மமாக சேர்ந்து இருந்ததை அவனுக்கு ஞாபகமூட்டின. அவள் உடலிலிருந்து மல்லிகை மனம் வந்து கொண்டிருந்தது. இந்த வாசனையை நாம் எப்பொழுது முகர்ந்திருக்கிறோம் என்று அவனுக்கு நினைவில் கொண்டு வரமுடியவில்லை. ஆனால் பிறவிபிறவியாக இந்த வாசனை அவனுடன்தான் இருக்கிறது என்பது புரிந்தது. எத்தனை ஜென்மம் கழித்து இவளைப் பார்க்கிறோம் என்று அவன் மனது ததும்பியது. “நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை” என்றாள் மீனாள் மீண்டும். அவன் சொன்னாலும் தனக்குப் புரியாது என்பது அவளுக்கு புரிந்தது. நெய்யாற்றங்கரையில் இருவரும் சற்று தள்ளியே அமர்ந்திருந்தார்கள். இந்த ஆற்றை எப்படிக் கடப்பது என்று அவன் யோசித்தான். வெகு தொலைவில் பரிசல் ஒன்று வருவது தெரிந்தது. அவனை கைகளைக் காட்டி அழைத்தான். முதலில் புரவியை பரிசலில் ஏற்றி அனுப்பினான். எதிர்கரையில் புரவியை விட்டுவிட்டு வந்த பரிசல் அவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. எதிர்கரையில் அவர்கள் இறங்கியதும் பரிசல்காரனுக்கு கொடுத்த தங்ககாசுகளை அவன் ஆச்சரியத்துடன் பார்த்தபடியே வாங்கிக்கொண்டான். மீனாள் அவனிடம் எழுதாத இரண்டு ஓலைகளை வாங்கினாள். தனது தாய்க்கும், ராஜா வீரரவிவர்மாவுக்கும் தன் மனம் கவர்ந்தவனுடன் செல்லப்போவதாக இருகடிதம் எழுதினாள். அதை அரண்மனையில் சேர்த்துவிடும்படி பரிசல்காரனிடம் சொன்னாள். அவனுக்கு படிக்கத் தெரியாது. படித்தாலும் பாதகமில்லை என்று நினைத்தாள். தயாராக இருந்த புரவியில் இருவரும் ஏறினார்கள். அவன் மீண்டும் புரவியின் கழுத்தைத் தொட அது மீண்டும் விரைந்தது. விரைவில் அவர்கள் திருவாங்கூர் ராஜ்யத்தைக் கடந்தார்கள். எல்லையிலிருந்த காவலர்கள் புரவியை நிறுத்தினார்கள். மீனாள் அவர்களிடம் பேசியதும் இருவரையும் செல்ல அனுமதித்தார்கள். இனி கவலையில்லை என்று இருவரும் நினைத்தார்கள். நீலப்புரவி விரைந்து சென்று கொண்டிருந்தது. தொடரும்….
To Read this news article in other Bharathiya Languages
நீலப்புரவி வீரன் பகுதி 2
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari