spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கட்டுரைகள்பாரதி-100: கண்ணன் என் காதலன்

பாரதி-100: கண்ணன் என் காதலன்

- Advertisement -
subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டுபகுதி – 28
கண்ணன் என் காதலன் 1 விளக்கம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

(அதிகாரம்: தெரிந்து வினையாடல் குறள் எண்:517)

“ஒரு செயலை, குறிப்பிட்ட ஒருவன் குறிப்பிட்ட ஒரு கருவியால்  முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்” என்பது வள்ளுவரின் வாக்கு. இக்குறள் எல்லா காலத்திற்கும் பொருந்தும் குறளாகும். பகையரசனை வெல்ல வேண்டும் என்பது செயல் எனக்கொள்வோம். இதிகாச காலத்தில் திவ்யாஸ்திரங்களைப் பெறுதல், அரசர்களோடு கூட்டணி அமைத்தல் போன்றவைகளைச் செய்ய வேண்டும். இரத, கஜ, துரக, பதாதிகளைத் திரட்டவேண்டும். இன்றைக்குச் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துப்பாக்கிகள், பீரங்கிகள், கப்பல், விமானம் போன்றவற்றைத் தயார் செய்ய வேண்டும். இப்போது ஒரு வைரஸ் போதும். உலகையே காலடியில் விழ வைக்கலாம். அன்று இராமனைப் போன்ற, அர்ச்சுனனைப் போன்ற வீரன் வேண்டும். சிவாஜி போல, மகாராணா பிராதப் சிங் போல வீரன் வேண்டும். இன்றும் நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லும் கட்சியும் பிரதமரும் வேண்டும். மொத்தத்தில் எல்லா காலத்திற்கும் பொருத்தமான குறள் இது.

     இக்குறளைப் போலவே பாரதியாரின் இந்தப் பாடலும் காதலியைப் பிரிந்து வாழும் காதலர் நிலையைச் சொல்லும், எல்லா காலத்திற்கும் பொருத்தமான பாடலாகும். காதலன் ஏழையாக இருக்கலாம், பணக்காரனாக இருக்கலாம், இந்தியனாக இருக்கலாம், வெளிநாட்டினவனாக இருக்கலாம் எல்ளோருக்கும் பொருந்தும் பாடல் இது. மனைவியைப் பிரிந்த கணவன், காதலியைப் பிரிந்த காதலன், காதல் மனைவியைப் பறிகொடுத்த கணவன் என அனைவருக்கும் இது பொருந்தும்.

     தூண்டிலில் மாட்டிய புழு வலியால் எப்படித் துடிக்கும்; கோயிலின் கருவறையில் உள்ள விளக்கைப் போல அல்லாமல் வெளியே வைக்கப்பட்டிருக்கும் சுடர் விளக்கினைப் போல நீண்ட நேரமாக எனது நெஞ்சம் உன் பிரிவால் துடிக்கிறது. வானத்தில் சுதந்திரமாகப் பறந்து மகிழ்ச்சியடைய முடியாமல் கூண்டில் அடைபட்டிக் கிடக்கும் கிளியைப் போல தனிமையில் மிகவும் வேதனைப் படுகிறேன். தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகள் பார்ப்பதில்லை; ஐபிஎல் கிரிக்கெட் ரோஹித் ஷர்மா ஆடினாலும் பார்ப்பதில்லை; நான் தின்னாமல் டைனிங் டேபிளில் முந்திரி அப்படியே இருக்கிறது; எல்லாம் வெறுத்துவிட்டதடீ தோழி, வெறுத்துவிட்டது.

subramanya bharathi
subramanya bharathi

     மெத்தையில் படுத்திருக்கிறேன். என் தாய் வருகிறாள். என் முதுகை வாஞ்சையோடு தடவுகிறாள். எனக்குத் தோசைக் கரண்டியால் சூடுபோட்டது போல இருக்கிறது. நான் தாயை “போ, போ” என விரட்டுகிறேன். உன்னோடு இருக்கும்போது என்னவெல்லாமோ பேசுவாயே. யாராவது என்ன பேசினீர்கள் எனக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் “ஸ்வீட் நத்திங்” எனப் பதில் சொல்வேனே. கொரொனா வந்தது போல தனிமை ஆயிற்றே நான் என்ன செய்வேன்?

     சாப்பிட முடியவில்லை; தூக்கம் வரவில்லை; பூஜை அறையில் கொளுத்தி வைத்திருக்கும் சாம்பிராணி வாசனை கூட சகிக்கவில்லை; பூவின் வாசனை பிடிக்க வில்லை. எல்லாவற்றிலும் குழப்பம்; என் குணம் என்ன? எனக்கே புரியவில்லை. ஒரு கணம் கூட நிம்மதியில்லை. பால் கசக்கிறது; டன்லப் படுக்கை முள்ளாய் குத்துகிறது; அன்பாய் வளர்த்த கிளியின் கிள்ளைமொழி என்னுடைய காதுகளை ஈட்டியாய் குத்திக் கிழிக்கிறது. என் நிலையைப் பார்த்த என் தாய் என்னை ஒன்றுக்கு நாலாய் வைத்தியர்களிடம் கொண்டு காட்டினாள். அவர்கள் “இது பூட்ட கேஸு” என்று சொல்லிவிட்டார்கள். அதோ அந்த ரயில் மேம்பாலத்தருகே அமர்ந்து ஜோசியம் சொல்லுகிறானே அந்த ஜோசியன் ராகு படுத்துகிறது எனச் சொல்லிவிட்டான்.

     ஹே தோழி, ஒரு நாள் இரவு நான் ஒரு கனவு கண்டேன். ஆனால் எதும் புரியவில்லை. யாரோ என் உள்ளத்தைத் தொட்டது போன்ற ஒரு உணர்வு. யார் எனக் கேட்க கண் விழித்தேன். ஆனால் அவனைக் காணவில்லை. ஆனால் என் மனதில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அதுவரை கொதித்துக் கொண்டிருந்த என் தலை திடீரெனக் குளிர்ந்தது. வீடு, மாடி, தோட்டம், திண்ணை எல்லாம் உடனே பிடித்துப் போனது. வாழ்க்கையின் மீது ஆசை வந்தது, எதைப் பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்க்கையின் மீதிருந்த பயம் போனது. எனகே ஒரு அழகு வந்ததடி என் தோழி.

     அவன் என் உள்ளத்தைத் தொட்டான் எனச் சொன்னேன் அல்லவா? அதனால் என் உள்ளம் குளிர்ந்ததடி. ஒரு புதிய அமைதி பிறந்தது. அதனால் வந்தவன் யாரென்று எண்ணி எண்ணிப் பார்தேன். வந்தவன் கண்ணன். அவன் திரூருவம் என் முன்னே நின்றதடீ.

     என்ன ஒரு உருக்கம். பிரிவாற்றாமையை  பாரதியார் உருக்கி வார்த்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe