– ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்
நம் தாய்திருநாட்டில் இந்திய காலெண்டர் மாதங்களில் பெரும்பால மாதங்களில் பலவிதான விழாக்களும், கொண்டாட்டங்களும் நடைபெறும்.
நமக்கு தை மிகவும் மகத்துவமான மாதமாய் இருப்பதைப் போலவே மஹாராஷ்டிராவிலும் ‘பௌஷ்’ ( தை) மாதம் பிரசித்தமானது.
சுமங்கலிப் பெண்களை இல்லத்திற்கு அழைத்து மஞ்சள் குங்குமம் ( ஹல்தி – கும்கும்) கொடுத்து ஒரு பரிசும் கொடுப்பார்கள்.
சாதி வேறுபாடு, ஏழை – பணக்காரர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்தக் கொண்டாடத்திற்கு அழைப்பார்கள். அனைவரும் தயங்காமலும் செல்வார்கள்.
சில வருடங்களுக்கு பிறகு எனக்கும் அவர்களின் முறை பழக்கமாகி விட்டது.
ஹல்தி கும்கும் நடக்கும் அன்று அவர்கள் போடும் ரங்கோலிகள், வீட்டை அலங்கரிக்கும் முறை, தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் விதம், பரிசுப் பொருட்கள், எள் – வெல்லத்தினாலான இனிப்பு என பல விதமான விஷயங்களால் இந்த நிகழ்வே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஹல்தி கும்கும் நிகழ்ச்சியை அனைவரும் ஒரே இடத்தில் கூடியும் செய்வார்கள்.
மஹாராஷ்டிராவில் இப்போது வரை நான் இருந்த இடங்களில் எல்லாம் நானும் அவர்களைப் போலவே அனைவரையும் அழைத்து ஹல்தி கும்கும் கொடுப்பேன்.
இப்போது நான் வசித்துக் கொண்டிருக்கும் நாந்தேட் நகரில் சில தவிர்க்க முடியாத காரணங்களிலால் கடந்த இரண்டு வருடங்களில் என்னால் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை. இந்த வருடம் இங்கு எங்களுக்கு மூன்றாம் வருடம். என் கணவரின் வேலையில் இடமாற்றம் இருக்கும் என்பதால் அடுத்த வருடம் இங்கே இருப்போமா என்று இப்போது சொல்ல முடியாது.
அதனால், இந்த முறை செய்து விட வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். ஆனால், இத்தனை நாட்களிலும் ஏதோ ஒரு விஷயத்தினால் நாளைக்கு அனைவரையும் கூப்பிடலாம், இரண்டு நாட்களுக்கு பிறகு கூப்பிடலாம் என்று யோசித்து யோசித்தே நாட்கள் சென்றன. நான் கடைசியில் கடைசி தை வெள்ளிக்கிழமை கூப்பிட யோசித்து வைத்திருந்தேன்.
வருபவர்களுக்கு ஒரு ‘நாஷ்தா’ (Snacks) கொடுக்கலாம் என்றிருந்தேன். அதனால், எங்கள் இல்லத்தில் வேலை செய்யும் பணிப்பெண்ணான ஸ்வாதியிடம் “வெள்ளிக்கிழமை உன் பெண்ணை அனுப்புகிறாயா, வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்க உதவியாய் இருக்கும்,” என்று கேட்டேன். உடனே, கண்டிப்பா அனுப்பறேன், என்றாள் ஸ்வாதி.
வெள்ளிக்கிழமை அமாவாசையும் இருந்ததால் ஹல்தி கும்கும் வைக்க முடியவில்லை. அப்புறம், ஒரு நாள் வைக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதை ஸ்வாதிக்கு சொல்ல நினைத்திருந்தேன்.
அதற்குள் வியாழக்கிழமையே ஸ்வாதி ” நாளைக்கு நாங்கள் வெளியூர் செல்கிறோம். நீங்க ஹல்தி – கும்கும் வெச்சா எங்களால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாதே, நீங்களே சமாளித்து விடுவீர்களா” என்றாள். ஓ! என்னைப் பற்றி இவ்வளவு யோசிக்கறாளே, ஸ்வாதிக்கு தான் இன்றைய வருடத்தின் முதல் ஹல்தி – கும்கும் கொடுக்க வேண்டும் என்று என் மனதில் பட்டது.
அதுவும் அப்பவே கொடுக்க முடிவு செய்தேன். பத்து நிமிடங்களில் கடகடவென்று தயார் செய்தேன். நானும் தயாரானேன். ஸ்வாதிக்கு ஹல்தி – கும்கும் கொடுத்து கற்பூரவல்லி செடி ஒன்றும் கொடுத்தேன். பின்னர் இல்லம் அருகில் இருந்த இருவரை அழைத்து நிகழ்ச்சியை தொடர்ந்தேன்.
ஸ்வாதி என் மேல் காட்டிய அக்கறையோ, கரிசனமோ தெரியவில்லை. ஸ்வாதி மூலமாக இந்த வருட ஹல்தி – கும்கும் கொண்டாட்டம் எனக்கு மிகுந்த மனநிறைவை தந்தது.
கொண்டாட்டத்தின் சாரமும் அதுதானே!!