அந்தக் காலத்தில் வயிறு கழுவ சிங்கப்பூர் மலாயா வந்த தமிழர்கள் நாம்தான் என்றால், நம்மையும் முந்திக் கொண்டு தென்னாப்ரிகா சென்று தடம் பதித்த தமிழர்கள் நிறைய உள்ளனர். உழைப்பாளிகளாக, நெற்றி வியர்வை சொட்டச் சென்றவர்கள், அந் நாட்டின் அரசியல்-பொருளாதார முன்னேற்றங்களுக்காக வாழ்நாளைத் தியாகம் செய்திருப்பதைக் காணும்போது, உலகத் தமிழினம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் கூலிகளாக, அடிமைகளாகச் சென்ற தமிழ் சமுதாயம், குடியேறிய நாடுகளின் வளர்ச்சிக்கு-வாழ்விற்கு-சிறப்பிற்குப் பாடுபட்டதையும், அந்த நாடுகளில் அவர்கள் ஆட்சி அங்கீகாரம் பெற்று வாழ்வதையும் நாம் காண்கிறோம். சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, மொரிஷியச், பிஜி,கனடா, பிரிட்டன் நாடுகளில் இந்தியத் தமிழர்கள் சூழ்நிலைக்கேற்பத் தங்கள் மொழியையும், மொழிக் கற்பித்தலையும் கட்டிக்காத்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
தென்னாப்ரிகாவில் 1860ல் தமிழர் புலம் பெயர்ந்த வரலாறு தொடங்குகிறது. உழைத்துப் பிழைக்க வந்தவர்கள், வெள்ளையர்களால் வேதனைப் படுத்தப்பட்டபோது, பொங்கிப் பெருகுகிறது போராட்ட வெறி. காந்தியார் தலைமையில் தமிழர்களின் உயிர்த் தியாகங்களில், 16 வயதில் சிறையில் உயிர்விட்ட தில்லையாடி வள்ளியம்மை ஒருவர்.
இவ்வாறு தமிழரோடு பின்னிப் பிணைந்து, ஆப்ரிக வல கோடியில் கிடக்கும் தென் ஆப்ரிகாவில், தமிழ் நாட்டில் பிறந்து பிழைப்பிற்காக அங்கு சென்று-வளர்ந்து, அந்த நாட்டு மக்களின் அடிமைத்தனம், அறியாமை, ஒற்றுமையின்மை, விடுதலை ஆகியவற்றுக்கும் எதிராகப் போராடி இன்றும் நம்மோடு வாழ்ந்து வரும் ஒரு மகத்தான மனிதர் ஜே நாயுடு.
தமிழக வேலூர் எங்கே – தென்னாப்ரிக சுவோடோ-கேப்டவுன் எங்கே? எங்கோ பிறந்தவர் எங்கேயோ வளர்கிறார். தென்னாப்ரிகாவுக்கு கூலி வேலைக்குப் போன பாட்டி அங்கம்மாவின் அழகுப் பேரன் ஜெயசீலன் என்கிற ஜே நாயுடுவின் வாழ்க்கைச் சரித்திரம் வகை வகையான வாழ்வியலை நமக்கு உணர்த்துகிறது.
மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் அடி நிழலில் வளர்ந்து, கருப்பர் இன முன்னேற்றத்திற்கும் அயராது உழைத்த ஜெயசீலன் நாயுடு, பிற் காலத்தில் தென்னாப்ரிகாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே உதாரணமான தொழிற்சங்கவாதியாகத் திகழ்பவர். இவரைத்தான் இந்த வார நேருக்கு நேர் நிகழ்வில் நாயகப்படுத்தினார் தயாரிப்பாளர் முஹமது அலி.
ஆங்கிலச் சரளம் அழகு நடை போட, தயாரிப்பாளர் அலியின் சுருதி ஓட்டத்தில், உலகின் பிற்போக்குக்காரர்களாகப் பார்க்கப்பட்ட கறுப்பினத்தவரின் வாழ்விற்காக மண்டேலா வாழ்ந்த வாழ்வை உணர்ச்சி வயப்படக் கூறினார் இந்த வேலூர்க்காரர்.
நிறம், இனம் இவை இங்கே சட்டங்களாகவே இருந்தன எனக் கூறும் நாயுடு, அதை எதிர்த்து இடைவிடாப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தியே ஆக வேண்டி இருந்த நிலையை விளக்கினார்..
“ 1990ல் நடந்த கடுமையான போராட்டங்களில் ஏராள மக்கள் பலியானதைத் தொடர்ந்து, கிளர்ச்சி வலுப் பெற்றது. அப்போது நெல்சன் மண்டேலா எங்களுக்குப் பெருமளவில் உதவினார்.அடக்குமுறை அரசோடு போராடுவது எளிதானதாக அமையவில்லை. நாடு பசி, பட்டினி, வறுமையில் தவித்த நிலைமை. கரும்புத் தோட்டங்களில் நம் மக்கள் உழைத்து உருக்குலைந்து கொண்டிருந்தனர். தொழிலாளர்களை ஒரே குடையில் கொண்டு வரும் முயற்சியில் நாங்கள் முயன்றபோது, அது சட்ட விரோதம் என்றனர் வெள்ளை அட்சியாளர்கள். ஆனாலும் அதை எதிர்த்தோம்-செய்தோம்” என ஜே நாயுடு சிதறல் இல்லாமல் கூறியபோது, அவர் அன்றைய முன்னணி போராட்ட வீரராக நமக்குத் தோன்றுகிறார்.
தமிழகத்தின் வேலூரிலிருந்து கூலி வேலை செய்ய பாட்டி அங்கம்மாவுடன் கப்பலேறி வந்த நாயுடு, அங்கேயே படித்துப் பட்டம் பெற்று அந் நாட்டின் வளர்ச்சிக்காக தொழிற்சங்கவாதியாகிறார். உரிமைப் போராட்டங்களில் பங்கேற்று அதிகார வர்க்கத்துடன் மோதுகிறார். உழைப்பாளிகளின் ஒற்றுமை கூறும் தேசிய தொழிற் சங்கம் உருவாக உதவுகிறார். மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் அமைச்சரவையில் பணியாற்றுகிறார். மக்கள் நலச் சீர்திருத்தங்களை நிலைநாட்டுகிறார்.
தமிழ் பேசத் தெரியாவிட்டாலும், உள்ளத்தால், உருவத்தால், எண்ணத்தால், எழுச்சியால் உலகப் பார்வையில் ஒர் உண்மையான தமிழராகக் காட்சி தருகிறார் ஜே நாயுடு,
‘தமிழ் தெரியாது. ஆனாலும் தமிழ்க் கலாச்சாரத்தை மதிக்கிறேன். வர்த்தக மொழியாக விளங்கும் வாய்ப்பில்லாததால், தமிழை வளர்க்கும் வாய்ப்பின்றிப் போனது. தமிழ் மக்கள் ஆங்கிலம், பிரன்ச், கிரியோன் மொழிகளைக் கற்று பிழைப்பு நாடி பல பகுதிகளுக்கும் செல்ல நேரிட்டது. என் அம்மா பாக்கியம், என் பாட்டி அங்கம்மா பெயர்களில் இன்றும் கல்வி டிரஸ்ட்கள் வைத்து, உள்நாட்டு உயர்வுகளுக்கு உதவி வருகிறேன் ‘ என்று நெஞ்சம் நெகிழக் கூறும் ஜே நாயுடு, கடந்து வந்த பாதையை அனுபவித்துச் சொன்னார்.
ஜோஹன்னிஸ்பர்க் நகர் சென்று படமாக்கப் பட்ட நாயுடுவின் காட்சிகள், பரந்த உலகின் பகுதிகளுக்குப் பறந்து சென்று குடியேறி பெருமை சேர்த்த தமிழர்களை நமக்கு நினைவூட்டியது. இது போன்ற நிகழ்சிச்சிகளை, சிங்கப்பூரில் தமிழர் மட்டுமன்றி மற்ற மொழியினர் பார்வைக்கும் வைக்கும் முயற்சியில் வசந்தம் துணிய வேண்டும்.
”தென்னாப்ரிகாவில் இன்றும் எங்கள் நிலமை மோசம். காரணம், எங்கள் இளையர்களுக்கு தரம் குறைந்த கல்வியே தரப்பட்டது. அதனால் திறன் இல்லாத சமுதாயம் உருவாக்கப்பட்டது என்றும் கூட சொல்லலாம்.. இன்றும் மக்களில் 60% பேருக்கு வேலை கிடையாது. அந்தக் காலத்தில் வெள்ளைய ஒடுக்கு முறை அரசோடு போராடியதால், அதிகம் சாதிக்க முடியவில்லை.போராட முடியவில்லை.’ என்கிறார் நாயுடு.
“பொதுவான வரலாறு எங்களுடையது. காலகட்டங்களில் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்துவிட்டோம் . வருங் காலத்தில் எங்களை தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொள்வது மட்டுமே எங்களின் கடமை” எனக் கூறும் ஜே நாயுடு, நம் கண்களுக்கு ஒளி படைத்த கண்களுடன், உறுதி கொண்ட நெஞ்சுடன் உயிர்ப்போடு தெரிகிறார்.
வேலூரில் பிறந்தால் என்ன – ஜொஹன்னிஸ்பர்க்கில் வாழ்ந்தால் என்ன? வாழ்த்துவோம் ஒரு தமிழரை! அன்னாரைத் தேடிப் பிடித்து நம் கண் முன் நிறுத்திய தயாரிப்பாளரை மனமாரப் பாராட்டுவோம்.
கட்டுரை: ஏ.பி.ராமன். (சிங்கப்பூர்)




