spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைஇன்று ஹிந்தி தினம்! வடக்கும் தெற்கும் வகைதொகையாய்..!

இன்று ஹிந்தி தினம்! வடக்கும் தெற்கும் வகைதொகையாய்..!

- Advertisement -

இன்று ஹிந்தி தினம்… ஹிந்தி மொழியை இந்தியர்களிடையே பரவச் செய்ய மத்திய அரசு பல ஆண்டுகளாகவே நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது … சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் காந்திஜி ஹிந்தி பிரச்சார சபாவை பிரபலப்படுத்தி…  ஹிந்தி   படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்தார்..! 

திருச்சி தென்னூரில் ஹிந்தி பிரச்சார சபா எதிர்ப்புறம் இருந்த தாய் சேய் நல விடுதியில்தான் பிறந்தேன்; ஹிந்தி பிரச்சார சபாவுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பும் இருந்தது. மூன்றாம் வகுப்பு படித்தபோது பிராத்மிக், மத்யமா இவற்றை எழுதியிருந்தேன். நான்காம் வகுப்புக்கு செங்கோட்டை  அரசு ஆரியநல்லூர் பள்ளியில் சேர்ந்த பிறகு, ஹிந்தி அப்படியே ‘கட்’ ஆனது.  எனவே ஹிந்தி எழுத்துகள் சிறு வயதிலேயே எனக்கு அறிமுகமாகியிருந்தது. அதனால் ஹிந்தி எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. ஆனால் பெரிதாக அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது! இந்தி பேசுபவர்கள் என்னுடன் பழக்கத்தில் இருந்ததில்லை. எனவே ஹிந்தி சரளமாக பேசவும் வராது; ஓரிரண்டு சிறுசிறு வாக்கியங்களே மனதில் பதிந்திருந்தது. 

பின்னாளில் இதழியல் துறைக்கு வந்தபோது, இந்தியில் இருந்து  செய்திகளை கட்டுரைகளைப் படித்து, அகராதி உதவியுடன் தமிழில் மொழிபெயர்த்தேன். மகாகவி பாரதி எழுதியது போன்று… பிற மொழியில் இருக்கும் நல்லவற்றை நம் மொழிக்கு கொண்டுவரும்  பணியை ஓரளவு சிறப்பாகவே செய்தேன்.  ஆனால் தமிழ் மொழியின் சிறப்புகளை பிறமொழியில் கொண்டுசேர்க்கும் கலையைக் கற்றுக்கொள்ள பெரிதும் மெனக்கெடாமல் விட்டுவிட்டேன்! அது இன்றளவும் எனக்கு குற்ற உணர்ச்சியையே தந்து கொண்டிருக்கிறது..! 

***

சங்கம் தொடர்புள்ள ஒரு கூட்டத்துக்காக, கடந்த மாதம் தில்லிக்குச் சென்றேன். மதுரையிலிருந்து நள்ளிரவு நிஜாமுதீன் விரைவு ரயிலில்  ஏறினேன்.  காலை சென்னை எழும்பூர் வந்த போது அப்பர் பெர்த்தில் இருந்து கீழே இறங்கி நோட்டம் விட்டேன்…  எதிர் இருக்கையில் மூன்று பேர் இருந்தார்கள். அதில் வயதானவர் ஒருவர். உத்தரப் பிரதேச பாரம்பரிய உடையில் இருந்தார்.  மூவரும் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அடுத்த இருக்கையில் ஒரு நபர் .. நம் பக்கத்தை போல் இருந்தார்…  அவர் சரளமாக அவர்களுடன் இந்தியில் கதைத்துக் கொண்டிருந்தார்… 

அவர்கள் பேசியதில் இருந்து…  அந்த மூன்று பேரும் ராமேஸ்வரம் யாத்திரை வந்தவர்கள் என்று தெரிந்தது. பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அழகர் கோவில் சென்றுவிட்டு கன்னியாகுமரி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து ரயில் ஏறி இருக்கிறார்கள் என்று தெரிந்தது..  அவர்களிடம் இந்த நபர் ஊர்களைப் பற்றியும் தொலைவுகளைப் பற்றியும் பேசிக்கொண்டே வந்தார்… 

 நான் அந்த நபரிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்…  அவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்; பெயர் ராமசாமி…! கோவில்பட்டி சொந்த ஊரென்றாலும், வடக்கே பீகார், அரியானா,உத்தரப்பிரதேசத்தில் வெகு காலம் என்.டி.பி.சி.,யில்  வேலை பார்த்து ஓய்வு பெற்றதையும், அவருடைய பணிக் கால அனுபவங்களையும் சொன்னார். அவரிடம் என்.டி.பி.சி., நிறுவன செயல்பாடுகள் குறித்து சிறிது பேசிக் கொண்டிருந்தேன். 

நான் பத்திரிகைப் பணியாளன் என்று சொல்லி விட்டதால், அவரது வடக்கத்தி அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டே வந்தார். தன் மகள் தில்லியில் வேலை செய்வதாகவும் அவரை பார்ப்பதற்காகவே தான் செல்வதாகவும் சொன்னார். இடையிடையே ஓரிரண்டு போன் கால்களில்..  தோத்திரம் என்று சொல்லிக்கொண்டதிலும், நண்பர் ஒருவர் பெயரைச் சொல்லி, அவர் வீட்டில் இந்த வாரம் ப்ரேயர் உண்டு, மறக்காம வந்துடுங்க என்று போனில் சொன்னதிலும், அவர் ஒரு க்ரிப்டோ என்று புரிந்து கொண்டேன். ஆனால் அதுபற்றி அவரிடம் எதுவும் கேள்வி எழுப்பவில்லை. அது அவர் சுதந்திரம்.

மறு நாள் ரயில் ஆக்ரா நெருங்கியபோது …  எதிரே புனிதச் சுற்றுலா வந்த மூவரிடமும் ராமேஸ்வரம் குறித்த பேச்சு வந்தபோது… அங்குள்ள தீர்த்தங்களை குறித்து மோசமான விமர்சனங்களை செய்தார்..  கோயில்களில் காசு பிடுங்குவார்கள் பூஜாரிகள் ரொம்ப மோசம்… என்றெல்லாம் விமர்சனம் செய்தார்…  தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை கோயிலுக்குள் விடாததால் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியதாக சொன்னார்.. இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னே   சென்ட் தாமஸ் இங்கே வந்ததாகச் சொல்லி,  மந்தவெளி சர்ச், பிருங்கி மலை மேலுள்ள சர்ச் எல்லாம் மிகப் பழையது, அங்கே ஒரு பிராமணர் தாமஸை கொன்று விட்டதால் சர்ச் அமைந்தது… என்றெல்லாம் சொல்லி பிராமணர்களை வசை பாடிக் கொண்டிருந்தார் …. 

என் நெற்றிக் குறியீடும் என் தன்மையும் அந்த நபருக்குத் தெரிந்தாலும், எதிரே இருந்த வயதானவரின் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டியும் குடுமியும் அவரது தன்மையை வெளிப்படுத்தியது தெரிந்தாலும்… அந்த நபரின் அநாகரீக பேச்சு  எனக்கு வருத்தத்தையும் கோபத்தையும் தந்தது … ! ஏற்கனவே… ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பஸ்சுக்காக காத்திருந்து  இதுபோல் டூர் வருபவர்களிடம் லிப்ட் கேட்டு ஏறி அவர்கள் கைகளில் சுவிசேஷ புத்தகத்தை திணித்து விடுவோம் என்று ஒரு மெண்டல் வீடியோவில் எக்காளமிட்டு சொன்ன வார்த்தைகள் என் நினைவில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது …

ஆனால் இவ்வளவு நேரம் அந்த நபரை ஒரு நல்ல மனிதராக எண்ணி பேசிக்கொண்டிருந்த அந்த மூன்று பேரின் நம்பிக்கையையும் குலைத்துவிட வேண்டாம் என்று நினைத்த நான்…  என் மொபைல் போனில்… ஏ கஹானி படா ஜூட் ஹ என்று ஹிந்தியில் டைப் செய்து, அம்மூவரில் இளையவராக இருந்த ஒருவரிடம் நீட்டினேன். அந்த நபரோ… அதை சத்தமாகப் படித்து விட்டு… இவர் இந்தக் கதை பொய் என்கிறார் எனச் சொல்லிச் சிரிக்க… அந்த கோவில்பட்டி கிரிப்டோ கொஞ்சம்கூட ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்…  இவர்களெல்லாம் ஆர்எஸ்எஸ் காரர்கள் இப்படித்தான் சொல்வார்கள் என்று அந்த மூவரிடமும் பதிலுரைத்தார் 🙂 

ரயில் தில்லி நிஜாமுதீன் வந்தது … நான் எந்தவித மனக்காழ்ப்பையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் … ஐயா ராமசாமிக்கு ஒரு வணக்கம் போட்டு… கைகொடுத்து நல்லபடியா போய் திரும்பி வாங்க என்று சொல்லி… அவர் வைத்திருந்த பைகளில் ஒன்றையும் எடுத்து சுமந்து கொண்டு, வெளியில் வரை வந்து வழி அனுப்பினேன் … 

ஓலாவில் நான் செல்ல வேண்டிய காந்தி ஸ்மிருதி இடத்துக்கான கட்டணத்தைப் பார்த்தபோது 164 ரூபாய் என்று காட்டியது … சரி வெளியிலேயே  ஆட்டோ பிடிப்போம் என்று, உடன் வந்த அந்த மூவரிடமும் விடைபெற்று ஆட்டோ தேடினேன்…  இரண்டு மூன்று பேரிடம் காந்தி சமாதி என்றபோது அவர்களுக்கு இடம் புரியவில்லை…  ஒரு நபர், அந்த இடத்தைப் புரிந்து கொண்டதாக… என்னை ஒட்டியபடி வந்து  ஆட்டோவில் அமர வைத்தார் … கட்டணம் கேட்டேன்… 200 ரூபாய் என்றார்… 35 ரூபாய் அதிகம் கொடுக்கிறோம்… சரி பரவாயில்லை என்று நினைத்தபோது, என்னுடன் ரயிலில் வந்த மூன்று பேரும் அந்த இடத்தைக் கடந்தார்கள்… அவர்களில் இளையவர் அந்த ஆட்டோகாரரிடம் ”எவ்வளவு கேட்டாய்?” என்று கேட்க, நான் ”ரூ.200” என்று சொல்ல… அவர் அவனிடம் பேரம் பேசி ரூ.180 வாங்கிக் கொள்ளச் சொன்னார். ஆட்டோக்காரரும் வேண்டா வெறுப்பாக அதற்கு ஒப்புக் கொண்டு… ஆட்டோவைக் கிளப்பினார்.

நான் இறங்க வேண்டியது அங்கிருந்த கெஸ்ட் ஹவுஸில். அந்த ஆட்டோகாரரும் இரண்டு மூன்று பேரிடம் விசாரித்து விட்டு… காந்தி சமாதி இருக்கும் பிரதான சாலை பகுதியிலேயே இறக்கிவிட்டு… இதான் நீங்க சொன்ன இடம்… உள்ளே போங்க வந்துவிடும் என்றார். கூகுள் மேப் தயவில்…  சரி அதனாலென்ன நாமே நடந்து செல்வோம் என்று நினைத்துக்கொண்டு ஆட்டோக்காரருக்கு 200 ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்…  அவரோ அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நூறு நூறு ரூபாயாக 3 தாள் எடுத்து மேற்கொண்டு 20 ரூபாயும் எடுத்து என்னிடம் தந்தார்…

 நானும் அதை சிரித்தபடியே வாங்கிக் கொண்டு… மெதுவாக ஒரு 100 ரூபாயை அமைதியாக திருப்பிக் கொடுத்தேன்…  அவரோ கேள்விக் குறியுடன் அதைப் பெற்றுக் கொண்டு… நோட்டு செல்லாததோ என்பது போல் திருப்பித் திருப்பிப் பார்த்தார். திரும்பவும் ஒரு நூறு ரூபாய் நோட்டை திருப்பிக் கொடுத்தேன்… சிறிது அமைதியான இடைவெளியில் மீண்டும் அந்த மூன்றாவது நூறு ரூபாயை திருப்பிக் கொடுத்தேன். இப்போது சொன்னேன்… ஏ பாயி.. மெய்னே சிர்ஃப் தோ சௌ ரூபயே தியா… பாஞ்ச் சௌ ரூபயே கா நோட் நஹி…  (தம்பி நான் இரு நூறு ரூபாய் தாள் தான் கொடுத்தேன்.. ஐநூறு ரூபாய் நோட்டு அல்ல) என்றேன்… 

அதைக் கேட்டும் நம்பாமல்… தன் கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை அவர் ஒவ்வொன்றாகப் பார்த்தார்…  நான் கொடுத்த இருநூறு ரூபாய் நோட்டைப் பார்த்துவிட்டு… இப்போது நமுட்டுச் சிரிப்பு சிரித்து… அந்த 180க்காகப் பேரம்பேசிய வெறுப்புப் பார்வைகளை எல்லாம் தூரப் போட்டுவிட்டு… கனிவாகப் பார்த்தார்… அதில் நன்றி தெரிந்தது… எனக்கோ அதைவிட ஜீவனத்துக்காக சிரமப்படும் அவன் குடும்பமே கண்ணில் தெரிந்தது.

இறங்கியது காந்தி சமாதி இடம் என்றாலும், நமக்கு இதெல்லாம் ஒரு சத்திய சோதனை இல்லைதான்! ஏதோ… தோ சௌ, பாஞ்ச் சௌ, தீஜியே, ஏ  லேலோ, சலோ என சின்னஞ்சிறு வார்த்தைகளும் வாக்கியங்களும் தெரிவதால்… ஓரளவு தில்லியை எதிர்கொள்ள முடிந்தது.

அடுத்து… நம் பகுதிக்கு வடக்கேயிருந்து ஆன்மிகச் சுற்றுலா வருபவர்களுக்கு… நம் ஊரைப் பற்றிய பெருமிதங்களை, பாண்டிய பல்லவ சோழ சேர ராஜாக்கள் நாயக்கர்கள் கட்டிய கோயில்களின் பெருமைகளை, சிற்பங்களின் மேன்மையை, மண்ணின் மகிமையை எடுத்துச் சொல்ல இயலாமல் போகிறது. வள்ளுவனும் பாரதியும் வடக்கே இருப்பவர்களின் அன்றாட வாய்மொழிகளில் சரளமாகப் புழங்க வேண்டாமா?! நாமோ நம்மவர்க்கே நம் பெருமையை சரியாகக் கொண்டு போகாமல் இருக்கிறோமே என்ற சிந்தனைகளெல்லாம் எனை ஆட்கொண்டது. 

 ஹிஹி… இன்று ஹிந்தி திவஸ் हिंदी दिवस ஆக… ஆக… 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe