எதிர்ப்பென்றால் வெறுப்பென்ற நிலைமை மாறி
எதிரியையும் வரவேற்கும் துணிச்சல் வேண்டும்!
எதிர்க்கருத்தைச் சமதளத்தில் சந்திக்கின்ற
இயல்புநிலை நமக்குள்ளே இருக்க வேண்டும்!
எதுசரியோ எதுதவறோ இருவருக்கும்
இடையினிலே நட்புறவு சிறக்க வேண்டும்!
பொதுவாழ்வில் இதையெல்லாம் புரிந்து கொண்டு
பொறுமையுடன் பயணிக்கும் வீரம் வேண்டும்!
ஒரு ஜாதி ஒரு கட்சி ஓர் ஊருக்கே
உரியவனாய் இருக்கின்ற நிலைமை மாறி
ஒருமைப்பாட் டுணர்வுடைய அனைவரோடும்
ஒத்துழைத்து வாழ்கின்ற நேர்த்தி வேண்டும்!
பெருவாரி சிறுபான்மை என்பதெல்லாம்
பிதற்றல்கள் எல்லாரும் ஒருதாய் மக்கள்!
உருவங்கள் வேறுவேறு உயிர் ஒன்றேதான்
உலகமே ஒருகடவுள் வடிவமன்றோ!
– வானவில் கே.ரவி