கதிரவன் கிரணங்களால் ஒளி வழங்கிய களைப்பு! ஓய்வைத் தேடி ஒளிகிறான் மலை முகட்டில்! அவன் மலையின் மடியில் சாயும் காலம்… சந்தியா காலம்! ஓடிக் களைத்த அவனுக்கு தாக சாந்தியாய்… மாலை நேரம் மந்திரம் சொல்லி அர்க்யமாய் உள்ளங்கை நீர்… அறிவே அர்ப்பணமாய்! மாலை வந்தால் மனத்தில் துவங்கும்… தியானமும் தவமுமாய்க் கழிந்த வாழ்க்கை! ஆகாசாத் பதிதந்தோயம்… உச்சரிக்கும் முணுமுணுப்பு! ஆகாயத்தில் இருந்து மண்ணில் வீழும் மழைத்துளி நதியில் சேர்ந்து கடலில் கலக்கிறது…! மற்ற தேவதைகளுக்கான வணக்கம் கேசவனிடமே சேர்கிறது! தேவதைகளை ஆராதித்து… ஒரே தேவனாய் கேசவன் தியானம்! எல்லாம் நன்றாய்த்தான் நடந்தது… நீ என் வாழ்வில் வரும் வரையில்! இப்போதெல்லாம்… மாலை நேரம் வந்தால்… மயக்கும் மாலையாய் மயங்கிப் போகிறேன்! மணக்கும் மாலையை மனத்தில் தாங்கியே! அந்தி சாயும் நேரம் வந்தால் புத்தி சாயும் உந்தன் மடியில்! தேவதைகள் எல்லாம் நீங்கிப் போனார்கள்… ஒரே தேவதையாய் நீ- என் முன் நிற்கிறாய்! வெண்ணிலவு முகம் காட்டி நட்சத்திரப் பற்கள் மின்ன முறுவலிக்கும் உனக்கான அர்க்யமாய்… அர்ப்பணமாய்… நானே!
Published:

