நல்லொழுக்கம்:: கல்வி:: கதை
துன்பங்களில் பொறுமையோடு இருப்போம் – 15/12/17
அம்மா, அம்மா, நான் கிளம்பிட்டேன். டிபன் ரெடியா? என்று கேட்டுக்கொண்டே அம்மாவை நோக்கி போனான் ஜார்ஜ் ஸ்டீபன்.
இதோ! ரெடியாகிவிட்டது. சாப்பிட்டு கிளம்புப்பா என்று அம்மா சொன்னார்கள்.
ஜார்ஜ் ஸ்டீபன் அவசர அவசரமாக சாப்பிட்டான்.
அப்பொழுது அம்மா ஜார்ஜிடம், இந்த வேலையாவது உனக்கு கிடைக்கும்படி நடந்துக்கோ. உதவி செய்வது நல்லதுதான். அதற்காக உன் வாழ்க்கையை இழந்துவிடாதே என்று சொன்னார்கள்.
அம்மா, அப்படி சொல்வதிலும் ஒரு காரணம் உண்டு. ஏனெனில் அவன் மிகவும் இரக்ககுணம் நிறைந்தவன். மற்றவர்களுக்கு உதவுவதில் முன் நிற்பான். இதற்குமுன் இரண்டு தரம் அவனுக்கு கிடைக்க இருந்த வேலையை மற்றவர்களுக்கு உதவ போக அந்த வேலையை இழந்துவிட்டான். அதனால் தான் அம்மா அப்படி சொன்னார்கள்.
ஜார்ஜ் ஸ்டீபன், ராமதூதன் ஆஞ்சநேயரின் பெயரில் மிகவும் நம்பிக்கையுள்ளவன். ஏனெனின் ஆஞ்சநேயர், தன்னை வருத்திக் கொண்டு, மற்றவர்களுக்கு உதவி செய்து, ராம தாசனாக இருப்பவர். ராமனின் பக்தர்களைக் காக்க எந்த வித சிரமத்தையும் அவர் தன்னில் ஏற்பார். எனவே ஆஞ்சநேயர் தனக்கு நிச்சயம் ஒரு நல்ல வேலையை தருவார் என்று ஜார்ஜ் மிகவும் நம்பிக்கையோடு இருந்தான்.
இரண்டு தரம் அவனுக்கு கிடைக்க இருந்த வேலை பறிபோனதை நினைத்து சிறிது கலங்கினாலும் ஆஞ்சநேயர் தன்னை கைவிட மாட்டார் என்று உறுதியாக எண்ணினான். அன்று அவன் ஸ்தோத்திரம் சொன்ன பொழுதுகூட, ஒருவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைகளுக்கு ஒப்பாயிருக்கிறான். சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமன் என்று விளங்கியபின் கர்த்தர் அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைத் தருவார் (யாக்கோபு 1: 6,12) என்ற வசனத்தை வாசித்தான். அப்போது அவனுக்கு ஆஞ்சநேயர் நினைவுதான் வந்தது. கடலைத் தாண்டி, எவ்வித சோதனையைக் கடந்து அவர் உதவினார். அதனால் ஜார்ஜ்ஜுக்கு இன்னும் நம்பிக்கை அதிகமானது. நம்பிக்கையோடு அம்மாவிடம் விடைபெற்று கிளம்பி சென்றான்.
10 மணிக்கு நேர்முகத்தேர்வு ஆரம்பிக்கும். அதற்குள் அவன் அங்கு செல்ல வேண்டும். அதனால் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு போனான். போகும் வழியில் ஒரு கார் பிரேக்டவுன் ஆகி நின்றது. எல்லோரும் அவரவர் வேலையின் அவசரத்தின் காரணமாக போய்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவனால் அப்படி போகமுடிய வில்லை. ஏனெனில் அவன் ஆஞ்சநேயரின் செய்கைக்கு உட்பட்டு நடக்கணும் என்று நினைப்பவன் ஆயிற்றே. அருகில் சென்று என்ன ஆயிற்று என்று கேட்டான். காரில் இருந்தவர் என்னவென்று தெரியல? திடீர் என்று நின்று விட்டது என்று சொன்னார். ஜார்ஜுக்கு கார் சம்பந்தமாக சில வேலை தெரியும் என்பதால் அதை ஆராய்ந்து பார்த்து சரிசெய்து காரை இயக்கினான். உடனே அது இயங்கியது. அவருக்கு ரொம்ப சந்தோஷம். நன்றி தம்பி என்று சொன்னார். பரவாயில்லை சார். என்னால் முடிந்த ஒரு சின்ன வேலை என்று சொல்லிவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் அரைமணி நேரம் மாத்திரம் இருந்தது. அவன் அவசரமாக கிளம்பி சென்றான். அவனால் சரியான நேரத்துக்கு செல்ல இயல வில்லை. 10 நிமிஷம் தாமதம் ஆனதால் அவனை உள்ளே விடமுடியாது என்று சொல்லி விட்டார்கள்.
அம்மா கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டே ஆஞ்சநேயரே உமது சித்தம் நடக்கட்டும் என்று வேண்டிய ஜார்ஜ் சிறிது சோர்வுடன் வெளியே வந்தான். பின்னால் ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். உங்களை முதலாளி கூப்பிடுகிறார் என்று சொல்லி அழைத்துப் போனார்கள். உள்ளே போன ஜார்ஜுக்கு ஒரே ஆச்சரியம்!! ஏனெனில் அவன் கார் பழுதுபார்த்துக் கொடுத்த அந்த மனிதர் அங்கே இருந்தார். அவர் அவனைப் பாராட்டி, எல்லோரும் அவரவர் வழியில் தங்கள் வேலையே முக்கியம் என்று போனபொழுது நீ நின்று எனக்கு உதவி செய்தாயே. அதனால் இன்று முதல் இந்த கம்பெனி முழு பொறுப்பையும் உன்னிடம் கொடுக்கிறேன். நீதான் இனி இந்த கம்பெனியை நிர்வாகிக்க வேண்டும், என்று சொன்னார்.
மற்றவர்களைப்போல் ஜார்ஜும் தன் வேலையே முக்கியம் என்று போயிருந்தால் அவனுக்கு இந்த கம்பெனியில் ஒரு சாதாரண வேலையே கிடைத்திருக்கும். ஜார்ஜின் பொறுமையும், இரக்ககுணமும் இன்று அவனை ஒரு பெரிய பதவியில் அமர்த்தி உள்ளது.
நாமும் துன்பங்களின் மத்தியில் செல்லும் பொழுது பொறுமையோடு, நம்பிக்கையோடு இருப்போமானால் ஆஞ்சநேயர் நாம் விரும்புவதற்கும், நினைப்பதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாகவே செய்வார்.
ஹே ராம் ஜெய் ராம் சீதா ராம்