கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
மேலும், மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது என தெரிவித்தார் பாஜக.,வின் மூத்த தலைவர்களின் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன்.
இதனிடையே, இவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்து கொண்டுள்ளோம் என்றும், பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர் என்றும், திருப்பூர் நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசினார்.
மேலும், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்தது என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் முதலீட்டாளர்கள் தமிழகம் வந்தால் திமுகவுக்கு மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ளார்.
ஆனால் சி.பி. ராதகிருஷ்ணன் பேச்சுக்கு பாஜக அனுதாபிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு மனிதரை எதிர்த்தே அரசியல் செய்ய முடியாமல் முடங்கிப் போயிருக்கும் ஸ்டாலின், தங்களை தோற்கடித்ததாக சிபிஆர் சொல்வது வேதனை என்று கூறுகின்றனர்.
சிலரோ, சிபிஆர் பொடி வைத்துப் பேசியிருக்கிறார். கருணாநிதி சொன்ன பொய்களை தமிழகம் நம்பியது, அதனால் பொய்களை வைத்தே கருணாநிதி வெற்றி பெற்று வந்தார். அதே பொய்களை வைத்து, இப்போது கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்று சிபிஆர் நக்கல் செய்துள்ளார் என்றும், இந்த அளவுக்கு பொய்களைக் கூறி ஸ்டாலின் வெற்றி பெற முடியுமானால், அவற்றை முறியடிக்க நாங்கள் இன்னும் அதிகம் கடின உழைப்பைச் செய்தாக வேண்டும் என்பதை எங்களுக்கு உணர்த்துகிறது என்று சிபிஆர் கூறுவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.