விடைபெற்றார் ஜெயலலிதா; தொண்டர்கள் கண்ணீர்!

Published:

சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் திங்கள்கிழமை நள்ளிரவு 12.10 மணிக்கு வெளியிட்டது.
அந்த அறிக்கை விவரம்:
“சொல்லொணாத் துயரத்துடன் முதல்வர் ஜெயலலிதா புரட்சித் தலைவி அம்மா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு இறந்து விட்டதை அறிவிக்கிறோம்.
காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுடன் முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.
இதையடுத்து அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, தாமே உணவு எடுத்து சாப்பிடத் தொடங்கினார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அண்மையில் மாற்றப்பட்டார். சிறப்பு சிகிச்சைப் பிரிவிலும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே வந்தது.
இவ்வாறு அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மிகக் கடுமையான மாரடைப்பு (இதயச் செயலிழப்பு-“மாஸிவ் கார்டியாக் அரெஸ்ட்’) ஏற்பட்டது. இதயத்தை மீண்டும் செயல்பட வைப்பதற்கான முதலுதவி சிகிச்சை முறைகள் செய்யப்பட்டன; அவை பலன் அளிக்கவில்லை.
உடனடியாக ஒரு மணி நேரத்துக்குள் செயற்கை இதய செயல்பாட்டு (“எக்ஸ்ட்ராகார்ப்போரியல் லைஃப் சப்போர்ட்’) கருவி, செயற்கை சுவாசக் கருவி ஆகியவை பொருத்தப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தை மீண்டும் செயல்படச் செய்வதற்கு உரிய அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. அனைத்து வகையான தீவிர முயற்சிகளையும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்டும்கூட முதல்வர் ஜெயலலிதாவின் பிற உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவரை இதயச் செயலிழப்பிலிருந்து மீட்டெடுக்க முடியாமல், திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு உயிர் பிரிந்துவிட்டது.
அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க ஓய்வின்றி உழைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பால் வாடும் நாட்டு மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் துயரத்தில் அப்பல்லோ மருத்துவமனை தன்னை இணைத்துக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img