கிட்டப்பன் (35) எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருபவர் அவரின் மனைவி பெயர் சுமதி (27) கிட்டப்பனுக்கும் சுமதிக்கும் திருமணமாகி வீரமணி, பரணி என 2 மகன்கள் உள்ளனர். காட்டுப்பாக்கம் அம்மன்நகர் 9-வது தெருவில் குடியிருந்தனர். சுமதி மீது சந்தேகமடைந்த கிட்டப்பன், அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இதனால் சில மாதங்களுக்கு முன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுமதி, அருகில் உள்ள தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டார். கிட்டப்பன் மட்டும் தனியாக அந்த வீட்டில் குடியிருந்துவந்துள்ளார். மனைவி மற்றும் மகன்களின் படிப்புக்கு கிட்டப்பன் பணம் கொடுப்பதில்லை.
இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிட்டப்பனைச் சந்திக்க சுமதி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பச் செலவுக்குப் பணம் தராதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிட்டப்பன், சுமதியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார்.
இதில் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியதால் சுமதி அங்கேயே மயங்கிவிழுந்துள்ளார். அதன்பிறகு கத்தியை எடுத்து சுமதியின் கழுத்தை கிட்டப்பன் அறுத்துள்ளார். இதனால் சுமதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதையடுத்து, சென்னை பூந்தமல்லி காவல்நிலையத்துக்கு ரத்தம் சொட்டச் சொட்ட கத்தியோடு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதனால் கிட்டப்பன் மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுமதி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுமதியின் சடலத்தைப் பார்த்துக் கதறினர். பள்ளிக்குச் சென்ற சுமதியின் மகன்களும் கதறி அழுதனர். சுமதியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை சம்பவம் காட்டுப்பாக்கம் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.