
ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லவும், ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே டிஎஸ்பி முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக ரயில்வே காவல்துறை இணைந்து பள்ளி மாணவ,மாணவியரை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.
அப்போது ரயில்வே காவல்துறை டிஎஸ்பி முருகன் தலைமையில் பள்ளி மாணவ – மாணவியர் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியபடி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பேரணியாகச் சென்றனர்.
மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறை டிஎஸ்பி முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது,

‘ரயில்களில் பயணிகள் பட்டாசுகள் போன்ற எளிதில் தீ பற்றும் மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
அதை மீறி கொண்டு சென்றால் கைது செய்யப்படுவார்கள். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெடிபொருட்களை கொண்டு செல்வதைக் கண்டறிய கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
ஐயப்ப பக்தர்கள் ரயிலில் ஏறுவதற்கு முன்பு பக்தி ரீதியாக கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் நெருப்பு பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
வியாபாரிகள் உட்பட யாராக இருந்தாலும் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது. அதை ரயில்வே காவல்துறை ஒருபோதும் அனுமதிக்காது’ என்று கூறினார்.