அதிமுக கூட்டணியின் முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
மேலும், நடிகர் அஜித் கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர் என்று நடிகர் அஜித் குமாரை பாராட்டியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
அது போல், அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும் ரஜினி – கமல் இணைப்பு குறித்து கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நிலவுகிறது என கிண்டல் அடித்து வருகிறார்.
இந்நிலையில் நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம் என கமல் கூறினார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என்றார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி கனவில் கூட தாம் முதலமைச்சர் ஆவோம் என்றுநினைத்து பார்த்திருக்க மாட்டார். அந்த அதிசயம் நடந்தது. நடக்கிறது. நடக்கும் என்று முக்காலமும் உணர்ந்த ஞானியாக பேசினார் ரஜினி.
இதனிடையே, ரஜினி – கமல் இணைப்புக் கருத்து குறித்து அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குறிப்பிட்ட போது, முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் என இந்த மொட்டை சொல்றேன் கேட்டுக்கோங்க என்றார்.
ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் தான் அது நம்பர். ஆனால் இங்கு யார் ஒன்று என நான் சொல்ல மாட்டேன் என ஒரு புதிரையும் போட்டுள்ளார்!