திருநெல்வேலி, மேலப்பாளையத்தில், எஸ்.டி.பி.ஐ., இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இஸ்லாமியர்கள் நிறைந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் காங்கிரஸ் பிரமுகரும் இலக்கிய பேச்சாளராக அறியப் பட்டவருமான நெல்லை கண்ணன். அப்போது அவர், பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசினார். ஒருமையில் ஒரு நாட்டின் பிரதமரைக் குறித்துப் பேசி, அங்கே கூடியிருந்த இஸ்லாமியர்களை மகிழ்வித்தார்.
தொடர்ந்து, இஸ்லாமியர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சோலியை முடித்துவிடுவீர்கள் என்று பார்த்தேன். இன்னும் முடிக்காமல் இருக்கீங்களே என்று கூறி, மோடி, அமித் ஷா ஆகியோரை இஸ்லாமியர்கள் கொலை செய்ய வேண்டும் என்று தூண்டிவிட்டுப் பேசினார்.
இவரது பேச்சு, சமூகத் தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்யத் தூண்டும் வகையிலும், ஹிந்து மதம் குறித்து அவதுாறாகவும் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நேற்று காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு (FIR Cr no 423/19) செய்தனர். நெல்லை கண்ணன் மீது, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 504, 505(1)(பி), 505(2) ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொலை செய்யுமாறு முஸ்லிம்கள் நிறைந்த கூட்டத்தில் பொதுவெளியில் பேசியுள்ளதால், அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அனைத்து முகாந்திரங்களும் உள்ளது என்றும், இது மாநில அரசின் வரம்புக்குள்ளும் வராது என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.