கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்ஸன் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில், கைதான பயங்கரவாதிகள் இருவரும் பாளை., சிறையில் அடைக்கப் பட்டனர்.
இது குறித்து நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் தக்கலையில் செய்தியாளர்களிடம் கூறிய போது, தமிழக காவல் துறை அளித்த தகவலால் குற்றவாளிகள் உடுப்பியில் கைதாகினர். களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ., வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை.
கைதான இருவரிடமும் இன்னும் நிறைய விசாரிக்க வேண்டி உள்ளது. கேள்விகள் கேட்கப்பட உள்ளது. இருவருக்கும் எந்தெந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது என்றார்.
இதனிடையே, கைதான பயங்கரவாதிகள் இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அவர்கள் இருவரும் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் கூறுகையில்,
விசாரணையில் 20 போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதான பயங்கரவாதி அப்துல் சமீம் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டாளிகளை கைது செய்ததால் காவல் துறையை பழிவாங்க பயங்கர திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.