70 வயது வரை நடித்து முடித்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர விரும்பும்போது, 30 ஆண்டுகளாக மக்கள் தொண்டாற்றி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆட்சிக்கு வரக்கூடாதா என அதன் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் அதுக்கு திமுகவும், ஆர்.எஸ்.பாரதியும் பிச்சை போடணுமே என நினைக்கும் போது தான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லையே என்கின்றனர் சமூகத் தளங்களில்!
பட்டியலின மக்களுக்கு நீதிபதி பதவி வழங்கியது திமுக., போட்ட பிச்சை என்று திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கூறியதற்கு, தாழ்த்தப் பட்ட மக்களுக்காக கட்சி நடத்துவதாகக் கூறும் திருமாவளவன் பெரிதாக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. கூட்டணி தர்மத்தை அனுசரித்து, அமைதி காத்தார். இருப்பினும், பல்வேறு தரப்பினரும் திருமாவளவனின் அமைதி குறித்து கேலி கிண்டல் செய்த போது, வேறு வழியின்றி, ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு நீதிபதி பதவி வழங்குவது என்பது யாரும் போட்ட பிச்சையல்ல, அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் தந்த உரிமை என்று கூறியுள்ளார். இதுதான் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கொடுத்துள்ள பதில் என்று கூறுகின்றனர் ஊடகங்கள்.
திருச்சியில் தேசம் காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய திருமாவளவன், எழுபது வயது வரை மேக்கப் போட்டு நடித்துவிட்டு ஆட்சிக்கு வரத் துடிப்பவர்கள் மத்தியில், 30 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார். ஆட்சிக்கு வரும் ஆசை தனக்கு இருக்கிறது என்று கூறும் திருமாவளவன், ஜாதி மற்றும் இஸ்லாமிய சார்பு மத அரசியலை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருவதும், தங்களை ஒரு ஜாதிக் கட்சியாகவே இன்னமும் முன்னிலைப்படுத்துவதும் ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் மட்டத்தில்!