சென்னை:
செங்கல்பட்டு அடுத்த மகிந்திரா சிட்டியில், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனத்தை அடுத்த மயிலம் சாலையைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் இளையராஜா (35), செங்கல்பட்டு அடுத்த மகிந்திரா சிட்டியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் நிறுவனத்துக்குச் சொந்தமான அறையில் தங்கியிருந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கடந்த 26ஆம் தேதி சொந்த ஊருக்குச் சென்று வந்த இளையராஜா, திங்கள் கிழமை பணிக்கு வந்தார். வேலை முடிந்த பின்னர், மாலை நிறுவனத்தில் உள்ள ஓய்வறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வரவில்லை. மறுநாள் வேலைக்கும் வராததால், சக ஊழியர்கள், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் பதிலில்லை. இந்நிலையில், செவ்வாய் அன்று அதிகாலை நிறுவனத்தில் உள்ள ஓர் அறையில் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இளையராஜா இறந்து கிடந்தார். இதைக் கண்டதும் இரவுப் பணியில் இருந்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கூறினர். அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்ஐ தாமோதரன் உள்ளிட்ட போலீசார் அங்கு விசாரணைக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் நிர்வாகத்தினர், இளையராஜா உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
‘‘எதற்காக இங்கிருந்து உடலை எடுத்துச் சென்றீர்கள்’’ என்று நிர்வாகத்திடம் போலீசார் கேட்டபோது, ‘‘வாய், மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அவர் பிழைத்துக் கொள்வார் என்றுதான் சேர்த்தோம்’’ என்று நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். பின்னர் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இளையராஜாவின் மரணம் குறித்து அவர் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மகிந்திரா சிட்டிக்கு விரைந்தனர். இளையராஜா மரணம் பற்றி விசாரித்தபோது, சரிவர பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின், இளையராஜா சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு செங்கல்பட்டு – மதுராந்தகம் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து செங்கல்பட்டு போலீஸார் அங்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர் இளையராஜா கொலை செய்யபட்டது தெரியவந்தால், கொலை வழக்காக மாற்றி விசாரிக்கபப்படும்’’ என்று உறுதியளித்தனர். இதையடுத்து,சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனிடையே, செங்கல்பட்டு தாலுகா போலீசில் இளையராஜாவின் மனைவி ரேவதி அளித்த புகாரில், ‘கணவரின் சாவில் மர்மம் உள்ளது, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். இதனால், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மகிந்திரா சிட்டியில் உள்ள நிறுவனங்களில், நபர்கள் உள்ளேயோ வெளியேயோ வேற்று நபர்கள் செல்ல கடும் பாதுகாப்பு கெடுபிடிகள் உண்டு. அதையும் மீறி இந்த மர்ம மரணம் நிகழ்ந்திருப்பதால், இளையராஜாவை நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களே கொலை செய்தார்களா அல்லது அவருக்கு ஏதேனும் நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர். அல்லது வெளி நபர்கள் உள்ளே நுழைந்து கொலைச் செயலில் ஈடுபட்டார்களா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரணம், இதே வளாகத்தில் ஐ.டி. துறையில் பணி புரிந்த சுவாதி என்ற பெண், கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். சர்வதேச நிறுவனங்கள், நபர்களின் ரகசியங்கள் புதைந்த தகவல் தொடர்புப் பணிகள் என்பதால், மென்பொருள் நிறுவன பணியாளர்களின் தொடர் கொலைகளின் பின்னணியில் சர்வதேச கும்பலின் கைகள் இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.