கோயம்பேடு வியாபாரிகள் மாதவரம் சென்று வியாபாரம் செய்ய மறுப்பு தெரிவிப்பதால் மாதவரம் தற்காலிக சந்தை செயல்படவில்லை!
மாதவரம் சென்று வியாபாரத்தில் ஈடுபட விருப்பமில்லை என பூ வியாபாரிகள் நேற்று முதல் கோயம்பேட்டில் உள்ள தங்கள் கடைகளை அடைத்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு மாதவரத்தில் வியாபாரம் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி நாளை முதல் பழ மார்க்கெட் வியாபாரிகளும் கோயம்பேட்டில் உள்ள தங்கள் கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி மார்கெட்டில் செயல்பட்டு வந்த பூ, பழம் அங்காடிகள் இன்று மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இயங்காத காரணத்தால் சில்லரை வியாபாரிகள், பொது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனிடையே கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு 8ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.