
கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் , நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் கொரோனா சிறப்பு பிரிவில் நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் வேலூரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவியும் கொரோனா சிறப்பு பிரிவில் பணியில் இருந்துள்ளார். கொரோனா சிகிச்சைக்காக பணியாற்றுபவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதி இல்லாததால் பிரதீபா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தனியாக தங்கியுள்ளார்.

வழக்கம் போல் இன்றும் பணிக்கு செல்ல ப்ரதீபாவின் தோழி அவரின் அறையை தட்டியுள்ளார். உள்பக்கமாக பூட்டியிருந்த அறை நெடுநேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த மாணவிகள் காவலாளிகள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது பிரதீபா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர். ஆனால் பிரதீபா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் உடலை கீழ்ப்பாக்கம் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி பிரதீபா நேற்று இரவு பெற்றோரிடம் செல்போனில் பேசியதாகவும், கொரோனா காரணமாக வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரதீபா எந்த முறையில் மரணமடைந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பிரதீபா இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதீபா இறப்பு மர்மமாக இருப்பதால் , சக மாணவிகளும் அதிர்ச்சியில் உள்ளனர்.


