கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்கக் கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் மரணம் அடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்ற போது அந்தப் பகுதியில் வசித்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் குறிப்பிட்ட சர்ச் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து மருத்துவரின் உடல் வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட எனது கணவரின் உடலைத் தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனுவை விசாரித்த சென்னை மாநகராட்சி ஆணையர், எனது கோரிக்கையை கடந்த மே 2-ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார்.
எனது கோரிக்கையை நிராகரித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது கணவரின் உடலைத் தோண்டியெடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் … என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அவர், காணொளி உரையாடல் மூலம் வழக்கை விசாரித்தார். பின்னர், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல் ஆணையர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.