
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வாகனங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து விதிமுறைகளை மீறி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது காரின் முன்பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கரை ஒட்டியபடி வந்த காரை மடக்கி சோதனை செய்த போது காருக்குள் விலையுயர்ந்த மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்த நபர்கள் போலீஸ் அதிகாரியின் உறவினர் எனவும், அந்த போலீஸ்காரின் அடையாள அட்டையை காண்பித்தனர். விசாரணையில் அந்த போலீஸ் அதிகாரி ஓய்வு பெற்றவர் என்பதும் அவருக்கு தெரியாமல் காரில் மதுபானம் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் தாம்பரம் அடுத்த படப்பையைச் சேர்ந்த கலைசெல்வன்(34), இவர் தாதா 87 பட தயாரிப்பாளர் என்பதும், அவரது நண்பர் ஆனந்தராஜ் (28), மருத்துவ துறையில் பணிபுரிந்து வருவது தெரிய வந்தது.

இவர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்று விற்பனை செய்ய முயன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து 240 விலை உயர்ந்த மதுபானங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்