சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சங்கர், அயனாவரம் பகுதியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சென்னை அயனாவரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி சங்கர். சங்கர், கீழ்ப்பாக்கத்தை அடுத்த நீயூ அவென்யூ பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது, ரவுடி சங்கர் இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து, சங்கரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, காவலர் முபாரக் என்பவரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டியுள்ளார்.
அப்பொழுது ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவலர்கள் சுட்டதில் படுகாயமடைந்த ரவுடி சங்கரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். எனினும், மருத்துவமனை செல்லும் வழியிலே சங்கர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி வல்லநாடு பகுதியில் போலீசை வெடிகுண்டு வீசி ரவுடி கொன்ற பரபரப்பு அடங்குவதற்குள், சென்னையில் என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.