திருநெல்வேலி அடுத்த ஆலங்குளத்தில் இருந்து அரசு பேருந்து தடம் எண் 303 நெல்லை டவுண் பஸ் நிலையத்திற்கு நேற்று செவ்வாய் கிழமை மாலை புறப்பட்டு சென்றது. பஸ்சில் பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 40க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஆலங்குளம் அடுத்த நெட்டூர் ஆற்றுப்பாலம் அருகே வரும் போது பஸ், டிரைவர் கட்டுப்பாட்டை மீறி தடுப்பு சுவரின் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுப்பையாபுரத்தை சேர்ந்த கோயில் என்பவரின் மகன் சிவரத்தினம் (17) சம்பவ இடத்தில் இறந்தார். பஸ்சில் இருந்த மாணவிகள், பெண்கள், முதியவர்கள் உள்பட 30 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தோருக்கு பாளை அரசு மருத்துவமனை, ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் இறந்த மாணவன் சம்பவத்தன்று பிளஸ்-2 அரசு தேர்வு எழுதி விட்டு பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகே ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: பிளஸ்-2 மாணவன் பலி: 30 பேர் படுகாயம்
Popular Categories


