மதுரை: திருச்சியில், ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நேற்று ராமஜெயம் கொலை வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், வழக்குரைஞர் எஸ்.ரவி ஆகியோர் ஆஜரானார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் இது குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர் சி.ரமேஷ், ‘போலீஸாரின் விசாரணையில் குற்றவாளிகள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். எனவே, விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணைக்கு 3 மாத கால அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை வரும் ஜூன் மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ல் திருச்சியில் நடைப்பயிற்சிக்காக காலையில் சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட கொலை நடந்து 3 ஆண்டுகள் முடியும் நேரத்தில், கொலையாளிகள் குறித்து எந்தத் தகவலையும் போலீஸார் இதுவரை வெளியிடவில்லை. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகள் யார் என்பதை போலீசாரால் இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி.க்கு 3 மாத அவகாசம்
Popular Categories


