சென்னை:
காவிரி விவகாரத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப் படுவதாக திமுக., அறிவித்துள்ளது.
தமிழக அரசே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதால், திமுக சார்பில் 23.2.2018 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து செய்யப் படுவதாக, மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், அரசு நடத்தவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனை தெரிவிக்கும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
முன்னதாக, திமுக., நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிமுக., பாஜக, உள்ளிட்ட கட்சிகளையும் அழைத்துள்ளதாகக் கூறியிருந்தார் ஸ்டாலின். திமுக., அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப் போவதாகக் கூறியதும், முதல்வர் எடப்பாடி தலைமையில் திமுக., அறிவித்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப் படும் என்று அறிவிக்கப் பட்டது.
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்., அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் படுவது அரசால் இருக்க வேண்டுமே அன்றி எதிர்க்கட்சியால் அல்ல, மு.க.ஸ்டாலின் முதலில் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை உணரவேண்டும் என்று கூறியிருந்தார்.