காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கடன் தொல்லையால் பெற்றோர் தங்கள் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்ததில் இருவரும் பலியாயினர். தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி இருவரும் உயிர் பிழைத்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் முல்லாபாளையம் தெருவில் வசிக்கும் பழனி என்பவரது மகன் வெங்கடேசன் (35). கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி அம்மு (32). இவர்களுக்கு கோமதி (9), கவிமதி (10) என 2 மகள். சின்னகாஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் கோமதி 5-ம் வகுப்பும், கவிமதி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். வெங்கடேசன் சொந்தமாக வாடகைக்கார் ஓட்டினார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஏற்கெனவே பலரிடம் வாங்கிய கடனாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த வெங்கடேசனும் அம்முவும், குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் இருவரும் சேர்ந்து, தங்கள் 2 மகள்களுக்கும் விஷ விதையை அரைத்து கொடுத்து குடிக்கச் செய்தனர். பின்னர் தாங்களும் விஷத்தை குடித்தனர். சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்து, வாயில் நுரை தள்ளியபடி வீட்டுக்குள் கிடந்தனர். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 4 பேரும், உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் கவிமதி, கோமதி ஆகியோர் இறந்தனர். வெங்கடேசன், அம்மு இருவரும் உயிர்பிழைத்து, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Popular Categories