செங்கோட்டை, தென்காசி பாம்பே ஸ்டோர் அதிபர் சுதன் நேற்று இரவு தென்காசியிலிருந்து செங்கோட்டையிலுள்ள தனது வீட்டிற்கு காரில் வந்த போது எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளில் பாம்பே ஸ்டோர் என்ற பிரபலமான ஜவுளி கடை உள்ளது. இதில் செங்கோட்டையை சேர்ந்த R.P. நாயகம் என்ற சுதன் என்பவர் இதன் உரிமையாளராக உள்ளார்.
நேற்று இரவு அவர் தென்காசியில் கடையை அடைத்து விட்டு, இரவு வீடு நோக்கி செங்கோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது இலஞ்சி கேஸ் பல்க் அருகே வந்த போது, செங்கோட்டையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற சரக்கு லாரியில் கார் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி, லாரியின் முன் பகுதியில் சிக்கியது. இதில் கார் முன்பகுதி முழுமையாக சேதமடைந்து காரை ஓட்டி வந்த சுதன் உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து குற்றாலம் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.