நடிகை ஸ்ரீதேவி தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, பின்னர் பாலிவுட்டை எட்டிப் பிடித்து, லேடி சூப்பர் ஸ்டார் ஆக கோலோச்சியவர். அவருடைய மறைவுக்கு உள்ளூர் மக்களும், ஊர்ப் பாசத்துடனும், சாதிப் பாசத்துடனும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி, விளம்பரங்களையும் செய்துள்ளனர்.
***
விருதுநகர் மாவட்ட எல்லையை ஒட்டிய நெல்லை மாவட்ட கரிசல் பூமியான கோவில்பட்டியைச் சேர்ந்தவரும் தற்போது திமுக.,வின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மண் சார்ந்த அனுபவப் பகிர்வை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்…
நடிகை ஸ்ரீ தேவி மறைந்துவிட்டார். இவரை சிறு குழந்தை பிராயத்திலிருந்து பார்த்தது நினைவில் இருக்கிறது. இவரது தந்தையார் அய்யப்பன் சிவகாசி பக்கத்தில் மீனம்பட்டியில் பிறந்தவர். தாயார் பெயர் ராஜேஸ்வரி. இவர் ஆந்திரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சென்னையில் வாழ்ந்தவர். இவரது பெரியப்பா மீனம்பட்டி ராமசாமி ஜனதா கட்சியின் சிவகாசிதொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1976 காலகட்டங்களில் இருந்தார்.
இவர் காமராஜருக்கு நெருக்கமாகவும் இருந்தவர். இவர்கள் எனக்கு உறவினர்கள். இவர் தந்தை அய்யப்பன் சென்னையில் கிரிமினல் கோர்ட்டுகளில்
தனது வழக்கறிஞர் பணியைமேற்கொண்டார். ஒரு பியட் கார் வைத்திருந்தார். இவரை, திருத்தங்கல் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்த எனது உறவினர் மறைந்த நத்தம்பட்டி சீதாராமனுடன் சென்னை வரும்போதெல்லாம் இவரை சந்தித்ததுண்டு.
பிறகு, 1989 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டியில் நான் திமுக சார்பில் போட்டியிட்ட போது, அதன் அருகேயுள்ள சிவகாசித் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இவரது தந்தை அய்யப்பன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் 1967இல் விருதுநகரில் காமாரஜரை வென்ற பெ. சீனிவாசன் போட்டியிட்டார். அந்த காலகட்டங்களில் தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரங்களுக்கு வருவார்.
இவரை இறுதியாக 1990இல் சந்தித்தேன். எப்போது என்றால் உச்சநீதிமன்ற நீதிபதி வி. இராமசாமி இல்லத் திருமணத்தில் சந்தித்தேன். நீதிபதி இராமசாமியின் மகனும் சட்டமன்ற உறுப்பினரான சஞ்சய் உடன் இவரது சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது சந்தித்து பேசியதுண்டு. அதன்பின்னர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 1960களில் கோடை விடுமுறையென்றால் சிறு குழந்தையாக ஸ்ரீ தேவி சிவகாசி அருகேயுள்ள சொந்த கிராமத்திற்கு வருவதுண்டு.
அவருடைய குடும்பத்தார் அனைவரும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருத்தங்கல் கோவிலுக்கு வருவதுண்டு. தனது நான்கு வயதில் 1967இல் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கினார்.
அப்போதே சிறு குழந்தையாக படங்களில் நடித்ததால் சிவகாசி வட்டார மக்கள் இவரை அன்புடன் பார்ப்பதுண்டு. குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் துவங்கி தமிழ்த் திரையுலகு மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஏன் பாலிவுட்டிலேயே தன்னுடைய நடிப்பினால் புகழைப் பெற்றுள்ளார். மொத்தம் 300 படங்கள் நடித்துள்ளார்.
நான் அறிந்தவரையில் அப்பாவித்தனமாக யாருக்கும் பாதகம் நினைக்காமல் இருப்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உலகத்தைப் பற்றி சற்றும் அறியாதவர் என்றும் அவருடைய பெற்றோர்கள் சொல்வார்கள். ஒரு முறை அவரது வீடு அரசு ஊழியர்களால் பிரச்சனையில் இருந்தபோது கூட யாரிடமும் உதவி கேட்க யோசித்தார் என்று அவரைச் சார்ந்தவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கூட இதை கேள்விப்பட்டவுடன் நேரில் அழைத்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். அதன் பின்னும் அந்த பிரச்சனை தொடர்ந்தது எனத் தகவல். சென்னையில் இருந்தவரை யாராவது பள்ளி, கோவில் கட்ட, பொது நலப் பணிகளுக்கு என்று உதவி கேட்டால் தாராளமாக உதவி செய்ததாகவும், அவரிடம் உதவி பெற்றவர்கள் என்னிடம் சொன்னதுண்டு.
ஸ்ரீதேவி 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிவகாசியில் பிறந்தார். இவர் பிறந்தபோது ஸ்ரீ அம்மா யங்கேர் என்று பெயர். பப்பி என அழைக்கப்பட்டார். அவரது தாயார் திருப்பதி,. அவருடன் ஸ்ரீலதா என்ற சகோதரியும் சதீஷ் என்ற சகோதரனும் கூடப் பிறந்தவர்களாவர். ஸ்ரீதேவியின் தந்தை 1991 ஆம் ஆண்டில் இறந்தார், அதேபோல் 1997 ஆம் ஆண்டில் அவரது அம்மா புற்றுநோயால் இறந்தார்.
ஸ்ரீதேவியின் தகப்பனார் வழக்கறிஞர் அய்யப்பன், 1962, 63 வாக்கில் கீழ்ப்பாக்கம் உமையாள் தெருவில், ஆவின் பால் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மக்கள் தொடர்பு அதிகாரியின் வீட்டில் வாடகைக்கு இருந்தார். பின் தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தார்.
மதுரையில்,1973 ம் ஆண்டு, ஸ்தாபன காங்கிரஸ் ஏடான பழ. நெடுமாறனின் செய்தி நாளேடு விழா தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது என நினைவு. பெருந்தலைவர் காமராஜர் அதை வெளியிட்டு, முதல் செய்திஇதழை அன்றைய மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தரான தமிழறிஞர். திரு. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பெற்றுக் கொண்டார்.
அந்த விழாவிற்கு ஸ்ரீதேவியின் பெரியப்பா மீனம்பட்டி இராமசாமி என்னுடன் வந்தார். அப்போது நடிகர் கமலஹாசனின் தந்தையார் பரமக்குடி வழக்கறிஞர் சீனிவாசன், தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த உ.சுப்பிரமணியம் வந்து அமர்ந்திருந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கமலஹாசன் – பிரமீளா நடித்து வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காலக்கட்டத்தில் தான் ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் வரவேற்பையும் பெற்றார்.
விழாவின் இடையில் நான் கமலஹாசனின் தந்தையிடம் இவர் தான் ஸ்ரீதேவியின் பெரியப்பா என்று அறிமுகப்படுத்தினேன். அவர் உடனே, தெரியுமே என்றார். கமலஹாசனின் தந்தையார் மீனம்பட்டி இராமசாமியிடம் நல்லா நடிக்கிறாங்க இந்த பொண்ணு, நல்ல லட்சணமாக இருக்குது. நல்ல குரல் வளமும் உள்ளது.
அந்த கால்கட்டத்தில் மதுரையில் எந்தவொரு காங்கிரஸ் கூட்டமாக இருந்தாலும், காமராஜர் நிகழ்ச்சியாக இருந்தாலும் கமலஹாசனின் தந்தையார் அரைக்கை கதர் சட்டை போட்டுக் கொண்டு கலந்து கொள்வது வாடிக்கை.
ஸ்ரீ தேவி குழந்தையாக இருக்கும் போது பாரீஸ் சாக்லேட்களை அதிகமாக கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.
#நடிகை_ஸ்ரீதேவி
#தமிழ்_திரையுலகம்
#கரிசல்_மண்
#actress_sridevi
#bollywoood