திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாசம் முன்பு வரை காரில் வந்து வழிபட்ட தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
இந்து முன்னணி துணைத்தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நாழிக்கிணறு பேருந்து நிலையம், கலையரங்கப் பகுதி ஆகிய இடங்களில் நிறுத்தி விட்டு, கிரிவலப் பாதையில் நடந்து சென்று கடலில் கால் நனைத்து விட்டோ, புனித நீராடியோ சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கிரிவலப் பாதையில் சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி, தெய்வானையுடன் மாலையில் தங்க ரத வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாபார். மற்றபடி எந்த வாகனமுமே கிரிவலப் பாதையில் செல்வதில்லை. ஒரு சில மாற்றுத்திறனாளி பக்தர்கள் நடக்க முடியாதவர்கள் மட்டுமே கோவில் சார்பில் இயக்கப்படும் பேட்டரி காரில் செல்வார்கள். அவர்களும் சண்முக விலாச வாசல் முன்பு இறக்கிவிடப் படுவதில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலையில் திருக்கோயில் வந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பக்தர்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், அதிகார பலத்திலும் சண்முக விலாசம் வாசல் முன்பு வரை தனது அரசு வாகனத்தில் வந்து சென்றார். இதனை பக்தர்கள் சார்பில் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதே போல மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி திருச்செந்தூர் கோயிலில் ஆகம விதியை மீறி, மேல் சட்டை அணிந்து உள்ளே சென்று வழிபட்டதை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். எனவே தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிடில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


