இளையராஜா மீது புகார் கூறும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு ராம.கோபாலன் கடும் கண்டனம்!

Published:

ilayaraja - 2026

சென்னை:  இசைஞானி இளையராஜா மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.. என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

சில நாட்கள் முன்பு, நிகழ்ச்சி ஒன்றில், இசைஞானி இளையராஜா, ஏசு உயிர்த் தெழுந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்ற ஒரு ஆவணப் படத்தைப் பார்த்தேன். ஆனால், உண்மையில் உயிர்தெழுந்தவர் மகரிஷி ரமணர் அவர்களே எனக் கூறினார்.

கிறிஸ்தவ மதத்தில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்பது கிறிஸ்தவ நாடுகளிலேயே ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா அத்தகைய ஒரு செய்தியை, தான் பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால், அப்படிப்பட்ட நிகழ்வு உண்மையில் நமது தமிழ்நாட்டில் ரமண மகரிஷி வாழ்வில் நடந்ததை சுட்டிக் காட்டியுள்ளார். ஏசு குறித்து அவர் விமர்சனமோ, தனிப்பட்ட கருத்தோகூட தெரிவிக்கவில்லை.

மகாத்மா காந்திஜி, இயேசு கிறிஸ்து என்பவர் கண்ணுக்கு தெரியாத பரம்பொருளாக விளங்குகிறார் என்று நீங்கள் நம்பச் செய்கிறீர்கள். ஆனால், நான் முயற்சி எடுத்து, புரிந்து கொண்ட வரையில் அதில் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது,  என்று அவர், கிறிஸ்தவ பாதிரிக்கு எழுதிய கடிதம் அமெரிக்காவில் ஏலத்தில் விடப் போவதாக வந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

அறிவியல் அறிஞர் கலீலியோ, உலகம் உருண்டை என்று உணர்து சொன்னார். பைபிளில் உலகம் தட்டை என்று இருப்பதற்கு இது எதிரானது எனக் கூறி, மத நம்பிக்கையை குலைக்கும் கருத்தை தெரிவித்தார் என அவருக்கு விஷம் கொடுத்து கொன்றனர் கிறிஸ்தவ பாதிரிகள்.

சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு,  அந்தக் கொலைக்கு கிறிஸ்தவ மத குருவான போப் மன்னிப்பு கோரினார். அறிவியல் உண்மையைக் கூறிய ஒருவரைக் கொன்றதற்குக் கூட சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ மத குரு மன்னிப்பு கேட்டது கேலிக் கூத்தானது பைபிளில் உள்ளது என்பதால், உலகம் தட்டையாக இல்லையே!

கிறிஸ்தவர்கள், நாள்தோறும், வீதிதோறும் சட்டவிரோதமாக, இந்து தெய்வங்களை சாத்தான் என்றும், இந்துக்களை  பாவிகள் எனப் பிரச்சாரம் செய்து வருவது எந்த வகையில் நியாயம்?

மற்ற மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் கிறிஸ்தவர்கள், தங்கள் மதமான கிறிஸ்தவத்தின் நம்பிக்கை பொய் என வெளியிட்ட விஷயத்தை கூறியதற்கு இசைஞானி இளையராஜாவை ஏன் கண்டிக்க வேண்டும்? ஆர்ப்பாட்டம் ஏன் நடத்த வேண்டும்?

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இந்துக்கள் வணங்கும் ஆண்டாளை, தாசி என்று, உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்து, அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியதுடன், பகுத்தறிவாதிகள் இதனை ஏற்பார்கள் என கூறினார் வைரமுத்து. இந்தப் பொய்யான, அபாண்டமான கருத்தை இந்து முன்னணி கண்டித்தது. இதற்குக்கூட ஊடகங்கள் விமர்சனம் செய்தன. இது  கருத்துரிமையை முடக்கும் செயல் என வைரமுத்துவிற்கு ஆதரவாக பேசிய கருத்துரிமைவாதிகள், இளையராஜா விஷயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?

இந்த இரட்டை வேடத்திற்குக் காரணம் கோழைத்தனம், அல்லது விலை போய்விட்டனர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

கிறிஸ்தவர்கள், மற்ற மதங்களின் மேல் செய்யும் வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்த்து பல ஊர்களில் இந்து முன்னணி தொடர்ந்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும், பிரச்சாரம் செய்தவர்களை பிடித்துக் கொடுத்தும் வருகிறது.

சட்டவிரோத சர்ச்/ ஜெபக் கூடங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மீது தமிழக அரசு, காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

கிறிஸ்தவ அமைப்புகள் இசைஞானி இளையராஜா மீது கொடுத்துள்ள புகார் முறையற்றது, கண்டிக்கத்தக்கது என இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.

– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img