
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியால் தவறான பாதையில் செல்ல அழைக்கப்பட்ட 4 மாணவிகளிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரம், அவர்களின் பெயர்களையோ, அடையாளங்களையோ வெளிப்படுத்தக் கூடாது என்று சந்தானம் குழு தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக உயர்பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். சந்தானத்திற்கு உதவியாக, பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அன்னை தெரசா கல்லூரி பேராசிரியை கமலி, வேளாண் பல்கலைக் கழக பேராசிரியை தியாகேஸ்வரி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக்குழு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து நேற்று, சந்தானம் மற்றும் 2 பெண் விசாரணை அதிகாரிகளும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். நிர்மலாதேவியால் தவறான பாதைக்கு அழைக்கப்பட்ட மாணவிகள் 4 பேரிடம், அவர்கள் பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அந்த நால்வரின் அடையாளங்களும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் விசாரணைக் குழு கவனமாக உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அதிகாரி சந்தானம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 9 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், இன்னும் 12 பேரிடம் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். நாளையோ அல்லது புதன்கிழமையோ நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறினார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு, சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது- இதற்காக மதுரை சிறையில் இருந்து சாத்தூர் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிர்மலா தேவி அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின் நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சிபிசிஐடி-க்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தினுள்ளே வழக்கறிஞர்களும், வெளியே மாதர் சங்கமும் நிர்மலா தேவிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். நீதிமன்றத்துக்கு உள்ளே விடக் கோரி முன்னேறிய அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலில் எடுக்கப்பட்ட நிர்மலா தேவியிடம், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்ட்து.
இதனிடையே நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், இந்த வழக்கில் இருந்து திடீரென விலகி உள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, தமக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றும், சொந்த விருப்பத்தின் பேரிலேயே வழக்கில் இருந்து விலகுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.


