ஸ்ரீரங்கம் கோயிலில் கன்யாஸ்த்ரிகள் ‘சிலுவை’ காட்டிய சர்ச்சை! நடந்தது என்ன?

Published:

srirangam temple nuns1 - 2026

புதன்கிழமை சமூக வலைத்தளங்களில் இரண்டு விதமான புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டன. அவற்றில் ஒரு சம்பவம், சென்னையிலும், மற்றொன்று ஸ்ரீரங்கத்திலும் நடந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கப் பட்டன.

சென்னை தாம்பரத்தில் சானடோரியம் அருகில் உள்ளது சிவன் மலை. இங்கே கோயிலுக்கு வந்து, இரு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில், ஜபம் செய்வதாகக் கூறி, கிறிஸ்துவர்கள் சிலர் முழங்காலிட்டு, ஜபம் செய்துள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர், அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ஒரு குழு பேருந்தை அமர்த்தி, இவ்வாறு வந்து பைபிள் வாசித்து, முழங்காலிட்டு கிறிஸ்துவ பிரார்த்தனைகளைச் செய்ததாக உடன் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

 

இது போல், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் சுற்றுலாப் பயணிகளாக சென்ற கிறிஸ்துவ கன்யாஸ்திரிகள் அரங்கனின் வைபவங்கள் கண்டருளும் ஆயிரங்கால் மண்டபத்திற்குள் கிறிஸ்துவ ஜெப மாலையை எடுத்து யேசுவிற்கு ஜெபித்தார்கள் என்று கூறப் படுகிறது.

இதுகுறித்து இந்த நிகழ்வைக் கண்டு மனம் வருந்தி, ஆலய கிழக்கு வாசல் கோபுர வாட்ச்மேனிடம் புகார் தெரிவித்த மூத்த பெண்மணியிடம் நாம் பேசியபோது, அவர் தெரிவித்தவை… “அன்று மாலை 6.30 மணி அளவில் வழக்கம்போல் கோயிலுக்குச் சென்று வலம்வந்த போது, கிறிஸ்துவ கன்யாஸ்திரிகள் ஆயிரங்கால் மண்டபத்தில் சுற்றிக் கொண்டிருந்தனர். பின்னர் சிலர் அங்கே அமர்ந்து பைபிள் வாசித்து ஏதோ ஜபம் செய்தனர். நான் அவர்களிடம் சென்று இது கோயில். இப்படி எல்லாம் இங்கே செய்யக் கூடாது என்று சொன்னேன்.

அப்போது வாட்ச் மேன் அங்கே வந்தார். அவரிடம் புகார் தெரிவித்தேன். இவர்களை எப்படி நீங்கள் ஆயிரங்கால் மண்டபத்துக்குள் இந்த உடையுடன் அனுமதிக்கலாம். அதுவும் சிலுவையை வெளியில் தொங்கவிட்டுக் கொண்டு ரங்கநாதர் அமரும் மண்டபத்துக்குள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னேன்.

அதற்கு அவர், அவர்கள் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் என்று கூறினார். ஆனால் கோயில் ஒன்றும் சுற்றுலா பார்க்கும் இடம் இல்லை, அப்படியே வந்தாலும் அவர்கள் இந்த உடையுடன் வந்து இங்கே அமர்ந்து ஜபம் செய்யக் கூடாது, அதை நீங்கள் தடுத்திருக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் வாட்ச்மேன் விடாப்பிடியாக அவர்களுக்கு ஆதரவாகவே பேசிக் கொண்டிருந்தார். இந்தப் பிரச்னை நடந்து கொண்டிருந்த சிறிது நேரத்தில் அவர்கள் எல்லோரும் வெளியில் சென்றுவிட்டார்கள்… என்று கூறினார்.

இந்தப் பெண்மணி அப்போது தனது மொபைல் போனில் அவர்களை படம் எடுத்துள்ளார். தொடர்ந்து, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞர்கள் இருவரை அழைத்து, இந்த விவரம் குறித்துக் கூறியுள்ளார். அவர்களும் வந்து, சம்பவம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

srirangam temple nuns - 2026

இது குறித்து அந்த இளைஞர்கள் நம்மிடம் கூறியபோது, தகவல் அறிந்து நாங்கள் ஆயிரங்கால் மண்டபத்துக்கு விரைந்தோம். ஆனால் அதற்குள் அங்கிருந்து அந்த கன்யாஸ்திரிகள் வெளியேறி விட்டனர். அவர்கள் கேரளாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் என்று கூறியுள்ளனர். இருந்தாலும் சிலுவை, கன்யாஸ்திரி உடை போன்ற அம்சங்களுடன் அரங்கன் மண்டபத்துக்குள் வந்திருந்தனர். மேலும், அவர்களை உடையவர் சந்நிதி வழியே வெளியில் அனுப்பியதாக அந்தக் காவலாளி தெரிவித்தார். நாங்கள் இது குறித்து தகவல் சொல்ல கோயில் இணை ஆணையர் ஜெயராமன் அலுவலகத்துக்குச் சென்றோம். அவர் உத்ஸவ நேரம் என்பதால் அதற்கான ஏற்பாட்டில் வெளியில் சென்றிருந்தார், அலுவலகத்தில் இல்லை.. என்று கூறினர்.

ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், கோயிலில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அவற்றில் பெரும்பாலான அம்சங்கள் உள்ளூர் பக்தர்களின் பாராட்டை பெற்றுள்ளன. சிலவற்றில் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. பக்தர்கள் ஏதாவது குறை சொன்னால் உடனே அதை கவனிக்கும் படி உத்தரவிட்டு, பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்பவர் ஜெயராமன் என்கிறார்கள். மேலும் அவர், நின்று போன விழாக்கள், மரியாதைகள், சுற்றுவட்டார சந்நிதிகள், கோயில் மடப்பள்ளி, ஹோம கைங்கர்யங்கள் இவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கோயிலில் பக்தர்கள் பெருமளவு வரவேண்டும் என்பதற்காக அவர் கவனம் செலுத்துவது நல்லதுதான், ஆனால் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்க்க அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

பொதுவாக, திருவரங்கம் கோயிலில் ஆர்யபடாள் வாசல் வரை எந்த மதத்தினரும் வந்து பார்க்க ஆலய சட்டம் அனுமதிக்கிறது. எத்தனையோ மன்னர்கள் கட்டி வைத்த அந்தக் கலைப் பொக்கிஷங்களைக் காண எல்லோருக்குமே உரிமை உள்ளது. இதில், சாதி மத நாடு இன பாகுபாடெல்லாம் பார்க்க இயலாது. பார்க்கவும் கூடாதுதான். எத்தனையோ வெளிநாட்டவர், வேற்று மதத்தவர் நம் ஆலயங்களைப் பார்த்து அதிசயித்து அதுகுறித்து பேசவும் செய்கின்றனர். ஆயினும் கோயிலில் உள்ள கருவறைக்குள் பக்தி உள்ள இந்து மதத்தினர் மற்றும் விக்ரஹ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே  சென்று வழிபட அனுமதிக்குமாறு ஆலய சட்டம் கூறுகிறது. காரணம், சிலைக்கும் விக்ரஹத்துக்குமான வித்தியாசத்தை பக்தரால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும் என்பதால்!

இந்தச் சம்பவத்தில், கன்யாஸ்த்ரிகள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த சிலுவையைத் தூக்கி வெளியில் காட்டி ஏதோ முணுமுணுத்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த பெண் பக்தர்கள் கூறியுள்ளனர். ஆனால் கோயில் காவலாளியோ, நாங்கள் தான் சிலுவையை எடுத்து உள்ளே போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி உள்ளே செல்ல அனுமதித்தோம். அதனை அவர்கள் எடுத்து அவ்வாறு செய்திருக்கலாம். அப்போது இந்தப் பெண்மணிகள் பார்த்திருக்கலாம் என்று கூறுகின்றார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இருப்பினும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீரங்கம் உள்ளூர் அன்பர்கள் சிலர், நம் ஆலயங்களைப் பார்க்க ஆசையுடன் வருபவர்களை வரவேற்று, அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து, நாம் தான் நம் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துச் சொல்லி, இங்கே இப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டும். அதை விட்டு, அவர்களை வெளியே துரத்துவது மிகத் தவறு என்கின்றனர்.

ஆலயம் என்ன சுற்றுலாத் தலமா? அவர்களை ஏன் அனுமதிக்கிறார்கள்? கோயில் காவலாளி பணம் பெற்றுக் கொண்டு இப்படி அனுமதித்துவிட்டார் என்று குற்றம் சொல்பவர்களும் உண்டு. இந்தச் சம்பவம் சாதாரண சுற்றுலா பயணியர் பார்வையிடும் சம்பவமாகவே இருந்தாலும், அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சற்று எச்சரிக்கை உணர்வுடன் அணுகியிருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஆடைக் கட்டுப்பாடு குறித்து இந்துக்களுக்கே அறிவுறுத்தும் அறநிலையத்துறை, இந்த விஷயத்தில் கவனம் கொண்டிருக்க வேண்டும்!

திடுக்கிடும் இன்னொரு சம்பவமாக, திருவரங்கத்தில் நடந்ததைப் போல், தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் கருவறைக்குள் கிறிஸ்துவர்கள் சிலர் இது போல் நுழைந்திருக்கிறார்கள் என்று தஞ்சை பக்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் வாயை மூடி இருக்க வேண்டும்?! ஒன்று படுவோம் ஹிந்துக்களே! இல்லை என்றால் நாம் தஞ்சை பெரிய கோவில், திருவரங்கநாதர் கோவில்கள் உட்பட பல ஆயிரம் கோவில்களை நாம் இழக்க வேண்டியதுதான் என்று குமுறுகிறார்கள். அவர்கள் இப்படி சொல்வதற்கு, இங்கே கிறிஸ்துவர்கள் செய்யும் அடாவடித்தனங்களே காரணமாகிவிட்டது.

மசூதி இருக்கும் எங்கள் பகுதி வழியாக, இசைக் கருவிகளை முழங்கிக் கொண்டு செல்லக் கூடாது என்று இஸ்லாமியர்கள்தான் இதுவரை இந்து மத ஆன்மிக ஊர்வலங்களைத் தடுத்தார்கள் என்றால், தஞ்சாவூர் பெரிய கோயிலில் சென்ற மாதம் நடைபெற்ற பெருந்திருவிழாவின் போது, அருகே இருந்த சர்ச் ஒன்றிலும் அதே போன்ற அடாவடித்தனத்தை அரங்கேற்றியிருந்தார்கள். இந்தச் செய்தியைப் படித்த இந்துக்கள் பலருக்கு ரத்தக் கொதிப்பு வந்தது.  சமூக வலைத்தளங்கள் பரவலாக்கம் பெற்றுவிட்ட இந்நாட்களில், இந்தச் செய்திகள் பலரையும் சென்றடைந்து, விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

எனவேதான் ஸ்ரீரங்கம் கோயில் போன்ற சம்பவங்கள் அதே கண்ணோட்டத்தில் உடனடியாக அணுகப் படுகின்றன என்பது தெளிவு. இத்தகைய சூழலில், கருத்துகள் சிலவற்றை சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காண முடிகிறது. அவற்றில் ஒன்று இது…

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

முதலில் பெரிய கோவில்களில் கீழ்க்காணும் விஷயங்களைக் கட்டாயமாக்க வேண்டும்.

1. மதச் சின்னம் ( விபூதி, குங்குமம், சந்தனம், நாமம் ) அணிந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப் படவேண்டும். இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

2. வேற்று மதத்தினர் யாராயினும் ” நான் ஹிந்து மதக் கோட்பாடுகளையும், ஹிந்து மத தெய்வங்களையும், தெய்வ நம்பிக்கை உடையவர்களையும் மதிக்கிறேன் ” என்று ஒரு படிவத்தில் அடையாள ஆதார் எண்ணோடு கையெழுத்திடுபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். யாரையும் மத மாற்றம் செய்யும் கேவலமான, காறி உமிழ்ந்து, அருவருக்கத் தக்க, சாக்கடை இழி நிலை இங்கு கோவில்களில் இல்லை.

3. சிற்பக் கலை, தொல்பொருள் ஆராய்ச்சி செய்பவர்களிடமும் இதை அமுல் படுத்தலாம். நம்பிக்கை சம்பந்தப் பட்ட விஷயத்தை ஆராய வருபவர்கள் கேடு கெட்ட முட்டாள்களாக இருக்கமாட்டார்கள். சில நூறு ஆண்டுகளின் அறிவியல் அறிவு முடியும் இடத்தில்தான் பல்லாயிரம் வருட நம்பிக்கைகள் தொடங்குகின்றன என்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியும்.

ஸ்ரீரங்கம் கோவிலில் வந்து பைபிள் படித்தவர்களின் மேல் முதலில் கோபம் வந்தாலும் பரிதாபமும் இருக்கிறது. உழைத்துப் பழக்கமில்லை. கையில் பணத் தட்டுப் பாடு. பிச்சை எடுக்க வறட்டு கௌரவம் தடை.

தானாக அழகர் பூசைக்குக் கூடிய கூட்டம், மாரியம்மன் கோவில் கூட்டங்கள் போன்றவை அவர்களை நிலை குலைய வைத்துள்ளது. 5-10 ரூபாய் கமிஷனுக்கு வீடு வீடாகப் போலி ஃபினாயில் விற்கும் சிப்பந்தி அளவிற்கு தள்ளப்பட்டுவிட்டனர். பிரபலங்களை மதம்மாற்ற பல லட்சக் கணக்கான ரூபாய்கள் தேவைப் படுகிறது.

டிமானிடைசேஷன் , NGO ஒழிப்பு போன்ற அரசின் நடவடிக்கைகளால் பண வரவு நின்றுவிட்டது. எனவே பழைய பால் பவுடர் முயற்சிகள் செய்ய முடியவில்லை. சில வருடங்கள் முன்பு இதை செய்திருந்தால் அரசு ஆதரவோடு, நல்ல சுவிசேஷ செய்தியாகப் பத்திரிகைகள் உற்பத்தி செய்திருக்கும். அரசும் மக்களும் யோசிக்க வேண்டும்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img