கர்நாடக சட்டசபைத் தேர்தலில், காவிரியில் நீர் திறந்து விட மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு அளிப்பதாக, காவிரி நீர் தேவையில்ல, மேலாண்மை வாரியம் அமைத்தால் போதும் என்று போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மே 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தொண்டர்கள் காங்கிரசின் வெற்றிக்கு பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கர்நாடகாவில் நடப்பது ஒரு சட்டமன்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல இன்னும் ஒரு ஆண்டுக்குள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமும் ஆகும். 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வகுப்புவாத சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடாமல் தடுப்பதற்கு அவர்களை கர்நாடகாவில் வீழ்த்துவது அவசியமாகும். மதச்சார்பின்மையின் நலன் கருதி கர்நாடாகாவில் உள்ள தமிழ் மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்த பிறகும் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருகிறது. மோடி அரசின் சூழ்ச்சியின் காரணமாக தமிழக கர்நாடக மக்களிடையே பகை உணர்வு அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தனது குறுகிய தேர்தல் நோக்கத்துக்காக அண்டை மாநிலங்களுக்கு இடையே மோதலை உருவாக்க முற்படும் பாஜகவிற்கு பாடம் புகட்டிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு அவர்கள் செய்யும் துரோகத்துக்கு இங்கே அவர்களைத் தோற்கடித்தால் மட்டும் போதாது கர்நாடகத்திலும் தோல்வியுறச் செய்ய வேண்டும்.
வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதன் மூலமே பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதை உணர்ந்து கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன் பட்டியில் ஹிந்து பட்டியலினத்தவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி, வீடு கடைகள் என அவர்களின் வாழ்வாதாரத்தை தீயிட்டுக் கொளுத்திய இஸ்லாமிய மதவாதத்தை ஆதரித்து வாய்மூடியுள்ள திருமாவளவன், வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதன் மூலமே பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பட்டவர்த்தனமாக இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Leave a Reply