தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, கலவரத்தை நடத்திச் சென்றதாகவும் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த வன்முறைகள் குறித்த வீடியோ ஆதாரங்களை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டன. அவற்றில் போலீஸாரை ஓட ஓட விரட்டி பயங்கரவாதிகளைப் போன்று திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப் பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பாக 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வாகனங்களுக்கு தீ வைத்த கலில் ரஹ்மான், முகமது யூனிஸ், சரவணன், வேல்முருகன், சோட்டையன், முகமது இஸ்ரப் ஆகிய 6 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


