குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியது. இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.
இந்நிலையில் இன்று காலை முதலே குற்றாலம், தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
பாதுகாப்பு ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதே போல் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து கூடியதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல் துறையினர் தடை விதித்தனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தண்ணீர் குறைந்தவுடன் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


