சென்னை கோயம்பேட்டில் போதையில் ஒருவரைத் தள்ளி விட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்றில் தொடர்புடையதாக எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, கோயம்பேடு அருகில் மே.5 ஞாயிறு நேற்று இரவு இருவருக்கிடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவருக்குமிடையே கைகலப்பு நடந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் ஒருவர் கீழே விழுந்து, உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக கோயம்பேடு போலீசார் பலரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, போதையில் தள்ளிவிட்டார் என்று குறிப்பிடப் பட்ட நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில், அந்த நபர் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா என்பது தெரியவந்தது. ஜெ. பிரான்சிஸ் கிருபா, நவீன கவிஞர். புதுக்கவிதைகள் எழுதுவார். பலராலும் நன்கு அறியப் பட்டவர். கவிதை, புதினம் என இயங்குபவர். மல்லிகைக் கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினமாக விருது பெற்றது. 2008ல் நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர் இவர்.
இந்நிலையில், பிரான்சிஸ் கிருபா இந்தக் கொலை தொடர்பில் கைது செய்யப் பட்டார். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் இறந்து போன நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப் படுகிறது.
Update: சென்னை கோயம்பேட்டில் மனநலம் பாதித்தவரை கொலை செய்ததாக எழுந்த புகாரில் இருந்து எழுத்தாளர், கவிஞர் பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப் பட்டுள்ளார். இறந்தவர் வலிப்பு நோயால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.