40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் #அத்திவரதர் திருவிழா ஜூலை 1 முதல் நடைபெற இருப்பதையொட்டி உள்ளூரில் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டிருந்தார்.
அதன்படி இன்று முதல் அனுமதிச் சீட்டு பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் நீண்ட வரிசையில் வாகன உரிமையாளர்கள் காத்துக் கொண்டிருக் கின்றனர்.
முன்னதாக, காஞ்சிபுரம் அத்திவரதர் உத்ஸவத்தை முன்னிட்டு, உள்ளூர் நபர்களுக்கு இன்று முதல் பாஸ் வழங்கப்படும் என்று ஆட்சியர் பொன்னையா அறிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் ஜூலை 1ம் தேதி திங்கள்கிழமை முதல் அத்திவரதர் வைபவம் துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தரிசன நேரம், தரிசனக் கட்டணம் இவை குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்களை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்படும் என்று ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.
வட்டார போக்குவரத்து அலுவலகம் இப்பணியை மேற்கொள்ள உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் இன்று முதல் அமைக்கப்படும் உதவி மையத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கான பாஸ் வழங்கப்படுகிறது.
வரும் 30ஆம் தேதிக்குள் இந்த பாஸ்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. பாஸ் கேட்டு வருபவர்கள் உள்ளூர் முகவரிக்கான ஆதார் அட்டை சான்றையும் வாகன உரிமைச் சான்றிதழ், காப்பீட்டு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்! முக்கியமாக, அவரவர் வாகனத்தை எடுத்துக் கொண்டு வரவேண்டாம் என்று ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்!
இந்த பாஸ் வழங்கப்படும் நோக்கம் குறித்து அதிகாரிகள் கூறியபோது, நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் விசாரித்துதான் போலீசார் அனுப்பி வைப்பர்! அத்தி வரதரை தரிசிப்பதற்கு காரில் வரும் பக்தர்கள் தற்காலிக பார்க்கிங்கில் இறங்கி, அங்கிருந்து இலவச பஸ் மூலம் கோயிலுக்கு அனுப்பி வைக்கப் படுவர். தரிசனம் முடிந்த பின் கோவிலில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் மூலம் கார் பார்க்கிங் இடத்துக்கு செல்லலாம்.
உள்ளூர்க்காரர்கள் காரை நிறுத்தும்போது இந்த பாசை காண்பித்தால் அவர்களை நகருக்குள் போலீசார் அனுமதிப்பர். வெளியூரில் இருந்து பிற வேலைகளுக்காக வருபவர்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோரை தொந்தரவு செய்யாமல் நகருக்குள் அனுமதிப்பார்கள்… என்று கூறினர்.
- செய்தி / படங்கள்: வி.என்.கேசவபாஷ்யம்