![ஹெல்மெட் குழப்பத்தில்... மனைவியை மாற்றி ஏற்றிச் சென்ற கணவர்’கள்’! 1 HELMETS 1](https://dhinasari.com/wp-content/uploads/2018/07/HELMETS-1.jpg)
ஹெல்மெட் உயிர் காக்கும் என்று விளம்பரம் செய்யப் படுகிறது. நீதிமன்றமும் ஹெல்மெட் கட்டாயம் என்று சட்டத்தைக் கடைப்பிடிக்க வற்புறுத்தி வருகிறது. போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றும் கேட்டு சாட்டையைச் சுழற்றி வருகிறது.
ஹெல்மெட் அணிந்து கொள்ளை அடிப்பவர்களுக்கு இது வசதியாகப் போய்விட்டது. ஹெல்மெட் கொள்ளையர்கள் என்று ஒரு பிரிவே கொள்ளையர்கள் பிரிவில் தனித்து அடையாளம் காட்டப் பட்டுவிட்டது. பெண்களிடம் சங்கிலி அறுத்தல், வீடுகளில் கொள்ளை அடித்தல் இவற்றை ஹெல்மெட் அணிந்து செல்லும் கொள்ளையர்கள் அரங்கேற்றிவிட்டு, அடையாளம் தெரியாதவாறு வீதிகளில் உள்ள கேமராக்களின் கழுகுக் கண்காணிப்பில் இருந்து தப்பி விடுகின்றனர்.
இந்நிலையில், ஹெல்மெட்டால் தத்தம் மனைவியையே மாற்றி ஏற்றிச் சென்ற கணவர் குறித்த செய்தி மேலும் ஹெல்மெட் கதைகளை சுவாரஸ்ய சூடாக்கியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள தாராபுரம் சின்னபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 50). விவசாயியான இவரது மனைவி பழனியம்மாள் (42). ரங்கசாமி நேற்று தாராபுரம் ஐந்து முக்கு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் போடுவதற்காக மனைவியுடன் மோட்டார் பைக்கில் வந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்த ரங்கசாமி, சட்டத்துக்கு உட்பட்டு ஒரு நல்ல குடிமகனாக ஹெல்மெட் போட்டிருந்தார். பெட்ரோல் போடுவதற்காக மனைவியை முன்புறத்தில் இறக்கி விட்டு விட்டு, பெட்ரோல் போட உள்ளே சென்றார்.
அதே நேரம், காளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்துச்சாமி (45) தனது மனைவி பொன்னாத்தாளுடன் மோட்டார்பைக்கில் அதே பெட்ரோல் பங்கிற்கு வந்தார். அவரும் வெள்ளைச் சட்டையும், ஒரே வண்ணத்தில் ஹெல்மெட்டும் அணிந்திருந்தார். ரங்கசாமி வைத்திருந்த அதே நிறுவனத்தைச் சேர்ந்த மோட்டார்பைக் தான் இவரும் வைத்திருந்தார்.
அதே போல் பெட்ரோல் போட முத்துச்சாமியும் தன் மனைவி பொன்னாத்தாளை வெளியில் இறக்கி விட்டுவிட்டு, உள்ளே பெட்ரோல் போடச் சென்றுவிட்டார். பொன்னாத்தாளும் பழனியம்மாளும் அருகருகே பெட்ரோல் பங்க் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, வண்டிக்கு பெட்ரோல் போட்டு விட்டு வந்த ரங்கசாமியின் மோட்டார் சைக்கிளில் முத்துசாமியின் மனைவி பொன்னாத்தாள் அடையாளம் தெரியாமல் ஏறிக் கொண்டார். அதேபோல் முத்துச்சாமியின் மோட்டார் சைக்கிளில் ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள் ஏறிக் கொண்டார்.
ரங்கசாமி பொள்ளாச்சி ரோட்டில் மேற்கு நோக்கி சின்னபுத்தூருக்கு சென்றார். முத்துச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் பழனியம்மாளுடன் கரூர் ரோட்டில் கிழக்கு நோக்கி காளிபாளையத்துக்குச் சென்றார்.
தாராபுரம் 5–முக்கில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு சென்ற பின்னர்தான், ரங்கசாமியின் மனைவி பழனியம்மாளுக்கு தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருவது தனது கணவர் ரங்கசாமி தானா? என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றும்படி கூறினார். அப்போது முத்துச்சாமிக்கு தன்னுடன் பேசுவது தனது மனைவியின் குரல் இல்லையே? என்ற சந்தேகம் எழுந்தது. மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கணவரைக் காணாமல் பழனியம்மாளும், மனைவியைக் காணாது முத்துச்சாமியும் பரிதவித்தனர். எங்கே தவறிப் போனார்கள் என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்தனர். உடனே பழனியம்மாள் தன்னுடன் வந்த முத்துச்சாமியின் செல்போனை வாங்கி தனது கணவர் ரங்கசாமிக்கு போன் செய்தார்.
மோட்டார் சைக்கிளில் சின்னப்புத்தூர் சென்று கொண்டிருந்த ரங்கசாமி போனை எடுத்து பேசினார். எதிர்முனையில் மனைவியின் குரல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருவது யார் என்று தெரியாமல் குழம்பிப் போனார்.
இதேபோல் போனில் பேசிய ரங்கசாமியின் குரல் கேட்டு பொன்னாத்தாளும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பழனியம்மாள் தனது கணவரிடம் நடந்த விவரத்தைக் கூறி தாராபுரம் டவுன்ஹாலுக்கு வரும்படி கூறினார். அதன்படி ரங்கசாமியும், முத்துச்சாமியும் டவுன் ஹாலுக்கு வந்தனர். அங்கு இருவரும் ஒழுங்காக ஹெல்மெட்டைக் கழற்றி முகம் பார்த்து, தத்தம் மனைவியரை சரியாக அடையாளம் கண்டு அழைத்துச் சென்றனர்.
தலைக்கவசம் தலையைப் பாதுகாக்கும்! தலையையும் பாதுகாக்கும்!
- கே.சி. கந்தசாமி
விதà¯à®¤à®¿à®¯à®¾à®šà®®à®¾à®© நிகழà¯à®µà¯ˆ கடà¯à®Ÿà®¾à®¯ ஹெலà¯à®®à¯†à®Ÿà¯ சடà¯à®Ÿà®®à¯ உரà¯à®µà®¾à®•à¯à®•à®¿à®µà®¿à®Ÿà¯à®Ÿà®¤à¯,