பாலிதீன் பாக்கெட்டுகளுக்கு பதிலாக கண்ணாடி குடுவை உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து பால் முகவர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றம் தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அது வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து பால் விற்பனையாளர்கள் முகவர் சங்கத்தின் சார்பில் சு.ஆ.பொன்னுசாமி விடுத்த அறிக்கையில்,
நெகிழி பொருட்கள் மீதான தடை குறித்து விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் “பாலினை நெகிழி உறைகளில் (பிளாஸ்டிக் கவர்) அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி குடுவையில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும்” அல்லது மாற்று ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறது.
நெகிழி பொருட்கள் மீதான தடை வரவேற்கப்பட வேண்டிய விசயமாக இருந்தாலும் கூட இந்தியா முழுவதும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பல பொருட்கள் மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழி கொண்டே தயாரிக்கப்படுவதால் தமிழகத்தில் மட்டும் நெகழிப் பொருட்களுக்கு தடை விதிப்பது என்பது தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களை நசுக்கி, பல லட்சம் தொழிலாளர்களை வேலை இழக்க வைத்து, அவர்களை கடுமையாக பாதிக்கும் செயலாக அமைவதோடு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் இச்சட்டம் சாதகமாக அமைந்து இச்சட்டமானது விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிப் போய் விடும்.
மேலும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் “பாலினை நெகிழி உறைகளில் (பிளாஸ்டிக் கவர்) அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி குடுவையில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும்” என்கிற கருத்தினை நடைமுறைப்படுத்தினால் அது கோடிக்கணக்கான மக்களை நேரிடையாக பாதிப்பதோடு, கடும் சிரமத்தையும் அளிக்கும்.
ஏனெனில் நெகிழிக்குப் பதில் கண்ணாடி குடுவையில் அடைத்து பாலினை விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு கண்ணாடி குடுவையில் பால் விநியோகம் செய்யப்பட்டால் அதனை சரியான குளிர் நிலையில் வைத்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்வது என்பது பால் முகவர்கள், சில்லறை வணிகர்களுக்கு இயலாத காரியமாகிப் போகும். அதுமட்டுமின்றி பாலினை அடைக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடி குடுவைகளை சுத்தமாக வைத்திருப்பது, சரியான குளிர் நிலையில் வைத்து பராமரிப்பது, இழப்புகள் இன்றி விநியோகம் செய்வது போன்ற காரணங்களால் பால் நிறுவனங்களுக்கு கூடுதலாக செலவாகும். அவ்வாறு ஆகும் கூடுதல் செலவினங்களை பொதுமக்களிடமிருந்தே வசூலிக்க வேண்டிய கட்டாயம் பால் நிறுவனங்களுக்கு ஏற்படும். அதன் காரணமாக பால் விற்பனை விலை கடுமையாக உயரும் சூழல் உருவாகும்.
எனவே “பாலினை நெகிழி உறைகளில் (பிளாஸ்டிக் கவர்) அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி குடுவையில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும்” என்கிற கருத்தினை மாண்பமை பொருந்திய நீதிமன்றம் மறுபரிசீலனை செய்வதோடு, “பாலினை அடைத்து விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் நெகிழியானது மறு சுழற்சி செய்யக் கூடியது” என்பதால் “பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்திய பால் உறைகளை சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்கள் திரும்ப பெற்று அவற்றை மறு சுழற்சி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்”.
அத்துடன் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை போன்று “இந்தியா முழுவதும் நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்”. அப்போது தான் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு நாடு தழுவிய அளவில் கடைபிடிக்கப்பட்டு தேசத்தின் நலனும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் காக்கப்படும் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்… என்று கூறியுள்ளார்.



