மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முதலில் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீரவரத்து குறைந்து சீர் அடைந்தது.
இதை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு அருகே செல்லாமல், ஓரமாக நின்று குளிக்கும் படி, பொதுமக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.
நாளை சனிக் கிழமை மற்றும் தொடர்ந்து ஞாயிறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் எதிர்பார்க்கப் படுகிறது. இதை அடுத்து குற்றாலம் பகுதியில் கடைகள் போட்டுள்ள வணிகர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.