சென்னை கோயம்பேடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்று தற்கொலை என நாடகமாடிய மனைவி உட்பட இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். வயது 28. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். இவர் இரு தினங்களுக்கு முன்னர், தனது வீட்டில் காது,மூக்கில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி காயத்திரி காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய கோயம்பேடு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் நாகராஜ், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து நாகராஜின் மனைவி காயத்திரியை காவல்துறையினர் உரிய விதத்தில், விசாரணை செய்தனர்.
இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. காயத்திரிக்கும் நாகராஜின் நண்பர் மகேந்திரன் என்பவருக்கும் கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது. இதை அறிந்த நாகராஜ் காயத்திரியிடம் அதை கண்டித்ததுடன், தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், மகேந்திரனையும் தீர்த்துக்கட்டுவதாக அவர் கூறியதாகவும் தெரிகிறது.
இது குறித்த தகவல், மகேந்திரனின் மனைவி பானுவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் உஷாரான பானு, காயத்திரியுடன் இணைந்து முன்னதாகவே நாகராஜை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதை அடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாகராஜை தலையணையால் முகத்தை அமுக்கி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். இதனை மொபைல் போனிலும் பதிவு செய்ததாகக் கூறப் படுகிறது. காயத்ரி அவரது கணவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்யும் வீடியோ பதிவுகள், பார்ப்பவர் நெஞ்சை பதறச் செய்துள்ளது.
ஆனால், கணவன் இறந்தது குறித்து எதுவுமே தெரியாதது போல் காலை வானகரம் மீன் மார்கெட் சென்றுவிட்டு காயத்ரி நாடகமாடியுள்ளது தெரிவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் காயத்திரியையும், பானுவையும் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, டிவி சீரியல் தனமாக இந்தக் கொலையை செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்தக் கொலை குறித்த வீடியோக்களும் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், கள்ளக் காதல் விவகாரம் குறித்த தீர்ப்பின் போது, கள்ளக்காதல் சட்ட விரோதமல்ல என்று தீர்ப்பு வெளியான பின்னர், கள்ளக் காதல் விவகாரத்தில் ஆண், பெண் இணைகள் கொலை செய்யப் படும் சம்பவங்கள் அதிகரித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.