நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பளபள வென கண்டெடுக்கப் பட்டுள்ளன. இது குறித்து செங்கோட்டை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில், ரயில்வே நிலையம் உள்ள பகுதியில், விஸ்வநாதபுரம் – பெரியபிள்ளை வலசை செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த நபர்களுக்குச் சொந்தமான அந்தத் தோட்டத்தில் பெரிய கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றில் தூர்வார கிணற்றில் இருந்து நீரை பம்பு செட் மூலம் வெளியேற்றினர். அப்போது கிணற்றில் 2 மோட்டார்பைக்குகள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், உடனடியாக செங்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் செங்கோட்டை போலீசார் அந்தப் பகுதிக்கு வந்தனர். போலீஸாரின் மேற்பார்வையில் கிணற்றில் மேலும் தேடிய போது, அதனுள் மேலும் சில இரு சக்கரவாகனங்கள் கிடந்துள்ளது தெரியவந்தது. போலீஸாரின் தேடுதலில் 10 பைக்குகள் வரை மீட்கப்பட்டன.
இந்த இருசக்கர வாகனங்கள் சில புதிது போல் காணப்பட்டன. இவற்றை யார் எதற்காக கொண்டு வந்து கிணற்றுக்குள் போட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த வித பயன்பாடும் இல்லாமல், இவற்றை ஏன் கிணற்றுக்குள் கொண்டு வந்து எவருக்கும் பயன் அளிக்காத வகையில் போட வேண்டும் என்று போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தப் பகுதியில் தொடர்ந்து போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக, இரு சக்கர வாகனங்கள் திருடு போனால் அவற்றை பகுதி பகுதியாகப் பிரித்து காயலான் கடையில் விற்றுவிடுவார்கள். பல்சர் பைக்குகள், யமஹா பைக்குகளை திருடி, இஞ்சின்களை தனியாகக் கழற்றிக்கொண்டு போய், ராமநாதபுரம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கள்ளக் கடத்தலுக்கான படகுகளுக்கு பயன்படுத்துவர் என்று கூறப் படுகிறது. இந்நிலையில், எதற்கும் பயன் இன்றி, இவ்வாறு பைக்குகள் கிணற்றுக்குள் போடப் பட்டிருப்பது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.