விஏஓ., தேர்விலும் முறைகேடு நடந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளின் போது, முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடுகளில் ஈட்டுபட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அதிகாரியான நாராயணன் என்ற சக்தி என்பவரும் ஈடுபட்டார் என்று கூறி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்த முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி சக்தி மூலமாகத்தான் ஜெயக்குமாரிடம் பணம் கொடுத்து, முறைகேடு நடந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
போலீஸ்காரர் சித்தாண்டி ரூ.2 கோடி வரை கொடுத்து 22 பேரை முறைகேடாக அரசுப் பணிகளில் சேர்த்துள்ளார். போலீஸ்காரர் பூபதி ரூ.55 லட்சம் கொடுத்து 5 பேரை அரசு வேலையில் சேர்த்துள்ளாராம்.
இந்நிலையில் கைதான கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற சக்தியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதில், 2016-ம் ஆண்டு குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. அந்த தேர்வில் கலந்துகொண்ட கிராம நிர்வாக அதிகாரி சக்தி ரூ.15 லட்சத்தை இடைத்தரகர் ஜெயக்குமார் மூலம் கொடுத்து வேலையில் சேர்ந்ததாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த முறைகேட்டில் கைதான போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் ஆகியோர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்!