இரு வழக்குகள்: சுகாதாரத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Published:

madurai-highcourt
madurai-highcourt

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த இரண்டு வழக்குகள்… (1)அரசு ராஜாஜி மருத்துவமனையில் தோல் சேகரிப்பு வங்கி உருவாக்க கோரிய வழக்கு: சுகாதாரத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் தோல் சேகரிப்பு வங்கி முழு நவீன வசதிகளுடன் விரைவாக உருவாக்க கோரிய வழக்கில், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மகாளிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “2016ஆம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீக் காயத்திற்கு என்று தனி பிரிவு மற்றும் தோல் சேமிப்பு வங்கியுடன் மத்திய அரசுடன் சேர்ந்து உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதன்படி 60 சதவீத பண உதவி மத்திய அரசும் 40 சதவீத பண உதவி மாநில அரசும் தீக்காய தனிப்பிரிவு மற்றும் தோல் வங்கி அமைப்பதற்கு ரூ.6.579 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி முதல் கட்டமாக டிசம்பர் 2020ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.2.079 கோடி மாநில அரசு ரூ1.386 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்தியாவில் 12 இடங்களில் தோல் சேகரிப்பு வங்கி உள்ளது. இந்தியாவில் 134 கோடி மக்கள் உள்ளனர். இதில், 70 லட்சம் பேர் தீ காயங்களால் பாதிப்படைந்துள்ளனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

தோல் சேகரிப்பு வங்கியில் சேகரிக்கப்படும் தோல்கள் 5 வருடம் வரை பதப்படுத்தப்படுகிறது. தீக் காயங்கள் ஏற்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இந்த தோல்கள் உதவுகின்றது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை தோல் சேகரிப்பு வங்கிகாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டரை வருடங்களாகியும் இந்தத்துறை தற்போது வரை உருவாக்கப்படவில்லை. மேலும் மதுரை மாவட்டத்தில் தீக் காயங்களுக்கு எனத் தனிப்பிரிவு மற்றும் தோல் சேகரிப்பு வங்கி உருவாக்கப்படுவதன் மூலம் மதுரையை சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்படும் தீக்காய தனிப் பிரிவு முழுமையான நவீன வசதியுடன் உருவாக்கப்பட வேண்டும். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை போல் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் முறை பின்பற்றப்பட வேண்டும் இதன் மூலம் தோல், எலும்பு, இதயம், ரத்தம் ஆகியவை சேகரித்து முறையாக பாதுகாக்க முடியும்.

இது குறித்து மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. எனவே மதுரை மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் முறையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டியும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீ தனிப்பிரிவு உடன் தோல் வங்கி நவீன வசதிகளுடன் தொடங்க கால நிர்ணயம் செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியும், தோல் வங்கி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தோல் வங்கி தொடங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவது குறித்தும் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்..(2)முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மனு – மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவு கோரிய மனுக்கள் குறித்து பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், பேச்சிப்பாறை பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டு 450 கனஅடி தண்ணீர் திறந்து வைக்கும் அளவிற்கு உயர்த்தி கட்டப்பட்டது. அந்த அணையில் தற்பொழுது நீர் நிரம்பி உள்ளது. இதில் இருந்து ராதாபுரம் பகுதிக்கு தினமும் 25 அடி கன அடி மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கையான தினமும் 150 கனஅடி திறந்து விடப்பட்டதால் இப்பகுதியிலுள்ள 52 குணங்கள் திருப்பித் தர வேண்டும். இதனால் இப்பகுதியில் உள்ள 16 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசன வசதி பெறும். அதே போல ராதாபுரம் தொகுதியில் உள்ள 1012 ஏக்கர் பாசனம் பெறும். எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து தினமும் 150 கனஅடி தண்ணீர் திறந்து 52 குளங்களையும் நிரம்பி தர உத்தரவிட வேண்டும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அதே போல, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, அணைகள் நிறைந்து தண்ணீர், கருமேனியாறு நம்பியாறு, தாமிரபரணி வழியாக, ஏழாயிரம் கனஅடி முதல் 40 ஆயிரம் கனஅடி வரை வீணாக கடலில் கலக்கிறது.

வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை மழையின்றி வறண்டு கிடக்கும் ராதாபுரம், திசையன்விளை சாத்தான்குளம், உடன்குடி, பகுதியில் உள்ள பாசன விவசாயிகள் பயன்படும் வகையில் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த இரு மனுக்களும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img