மதுரை – தேனி-மதுரை இடையே மே 27-ம் தேதி முதல் பயணிகள் ரயில்..

Published:

மதுரை – தேனி-மதுரை இடையே மே 27-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்ட்டி ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என ரயில்வே துறை கூறியுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பின் மே 27 முதல் மதுரை – தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளா பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின் வியாபார தேவைக்கென போடி – மதுரை இடையிலான ரயில் போக்குவரத்து கடந்த 1928-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ஓட தொடங்கியது. குறைந்த கட்டணத்தில் ஏலக்காய், பழங்கள், காய்கறிகள், இதர விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருந்தது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்த ரயில் பாதை அகலரயில் பாதை பணிக்காக 2010 டிசம்பரில் மதுரை – போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான மதுரை – போடி அகல ரயில்பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்து பணிகளும் தற்போது முடிந்துள்ளன. ஏற்கெனவே மதுரை – உசிலம்பட்டி 37 கி.மீ., துாரத்தை ஜனவரி 2020-ல் பாதுகாப்பு ஆணையர் மனோகரனும், உசிலம்பட்டி – ஆண்டிபட்டி 21 கி.மீ., பாதையை டிசம்பர் 2020-ல் அபய்குமார் ராய் என்பவரும் ஆய்வு செய்தனர்.
ஆண்டிபட்டி – தேனி 17 கி.மீ., துாரத்தை மார்ச் 2022-ல் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் மதுரை- தேனிக்கு ரயில் சேவை தொடங்கலாம் என அனுமதி அளித்தார். இதன்படி, ரயில் இயக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதற்கிடையில், மதுரை – தேனிக்கு முதல் கட்டமாக ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் பிரதமர் மோடி மே 26-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் வைத்து மதுரை- தேனி ரயில் சேவை தொடங்கி வைக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகமும் மேற்கொண்டுள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை – தேனி இடையே மே 27 முதல் ரயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை மாவட்ட மக்கள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில், வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக காலை 9.35 மணிக்கு தேனி ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.

அதே போல, தேனி ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி வழியாக மாலை 7.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த விரைவு ரயிலில் மொத்தம் 12 பயணிகள் பெட்டியுடன் இயங்குகிறது.

மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, மதுரை- தேனி இடையே அனைத்துப் பணிகளும் முடிந்து, ரயில் ஓட்டுவதற்கு தயார் நிலையில் இருந்தோம். பிரதமர் சென்னையில் வைத்து ரயில் சேவையை 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். தேனி – போடி இடையே 15 கிலோ மீட்டருக்கு பணி நடக்கிறது. விரைவில் அதுவும் முடிந்துவிடும். மேலும், மதுரை – போடிக்கு மின்சார ரயில் இயக்க அனுமதியும் கிடைத்துள்ளது. மின்மயமாக்கல் பணி விரைவில் தொடங்க இருக்கிறது என்றனர்.இந்த நிலையில் தேனி மதுரை விருதுநகர் நெல்லை தென்காசி மாவட்ட தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து நெல்லை தென்காசி மதுரை வழி தேனிக்கு தினசரி ரயில் இயக்க தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!
images 7 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img