அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜன 17இல் ..!

Published:

images 2022 12 20T113825.941 - 2026

தமிழர்கள் திருநாள் தை பொங்கல் பண்டிகை விழாக்களில் பிரபலமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இந்த ஆண்டு வரும் ஜன 17இல் நடைபெறும் என விழா குழு அறிவித்துள்ளது.

 பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கியுள்ள அந்த ஊர் விழா கமிட்டியினர் போட்டியை நடத்த அனுமதி கோரியும், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தும் நேற்று ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17-ம் தேதி நடக்கிறது. போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அலங்காநல்லூரில் விழா கமிட்டியினர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்துகிறோம்.

இதில், பார்வையாளர்களுக்கான கேலரிகளை அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும், வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள பரிசுப் பொருட்கள் குறித்தும் ஆலோசிப்போம். விழாவுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைக்க உள்ளோம் என்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக நாளை மறுநாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதனை நல்ல முறையில் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. இந்த ‘நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக வரும்-22 ஆம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை நந்தனத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கால்நடை துறை அலுவலர்களுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img