நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் பொன்னையா (வயது 26). ஆட்டோ டிரைவர். இன்று புதன் கிழமை காலை நெல்லை வடக்கு பைபாஸ் ரோடு தனியார் மருத்துவமனை அருகே ஆட்டோவில் சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து பொன்னையாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. . இது குறித்த தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக பொன்னையா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பொன்னையா கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்கள், லாரி ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்கப்பட்டது. பதற்றம் ஏற்பட்டதால் தச்சநல்லூர் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது. கொலையாளிகளை பிடிக்க தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

