
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் அதிமுக இபிஎஸ் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசு பலமான, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர் என்று
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேலும் கூறியுள்ளதாவது,
இன்று தாக்கலான பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்.இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கையும் உள்ளது.
கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.திமுக கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் அதிமுக இபிஎஸ் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசு பலமான, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர்.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதுதான். எனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன்பிடி கிராமங்களுக்கு பிரச்னை இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு சிலை வைப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறது. இதுகுறித்து நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டம் அரசு நடத்தியதா அல்லது திமுக நடத்தியதா என தெரியவில்லை.அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் சிலை வேண்டாம் என்று தான் பேசியுள்ளார்கள்.பேனா சிலை விவகாரத்தில் தமிழர்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.
மக்களின் கருத்தை அரசு மதித்து செயல்பட வேண்டும்.திமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
திமுக கூட்டணிக்கு ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்த போகிறது.
இடைத்தேர்தல் என்பது எந்த கட்சியின் பலத்தையும் நிரூபிப்பதற்கானது அல்ல.
இன்று அதிமுக இபிஎஸ் அணி கட்சி தேர்தல் அலுவலகத்தில் கூட்டணி பெயரை மாற்றி இருப்பதும் பாஜக தலைவர்கள் படம் பேனரில் இல்லாதது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன் என்றார்.
நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக வேட்பாளரை இன்று அறிவித்தது. தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வேட்பாளர் அறிவிப்பு வெளியானது. அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என உள்ளது. பாஜக முடிவை அறிவிக்காத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனையை அதிமுக திறந்துள்ளது.
இந்த பேனரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. பாஜக முடிவை பொறுத்து பதாகையை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




